MMK Epi 3 Teaser

0
956

“என்னடி இப்படி வந்து நிற்கிற…” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா.

“அம்மாஆஆ….”

“சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன.. இப்ப என்னன்னா ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளி போட்டவ மாதிரி வந்து இருக்க…”

“அம்மா… அது வந்து…”

“அய்யோ!.. என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லித் தொலைடி… பெத்த மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது”

“நாங்க ரெண்டு பேரும் கிளம்பி போனோமா?”

“ஆமா ஒண்ணா தானே போனீங்க…அதுக்கு என்ன?”

“ஒண்ணா எல்லாம் போகலைமா?”

“அப்புறம்?…”

“நான் வண்டியில் ஏறப் போகும் பொழுதே அவர் கூட இருந்த நாய் என்னை முறைச்சு பார்த்துச்சும்மா…”

“ஐயோ ராமா… கதை அளக்காம சீக்கிரம் என்ன நடந்ததுன்னு சொல்லுடி…” என்று கோகிலா அதட்ட.. சிவநேசனும் மகள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். நடந்ததை தெரிந்து கொள்ள…

அருந்ததி ஜீன்ஸ் மாட்டிக் கொண்டு கீழே செல்லும் முன்னரே புல்லட்டில் ஏறி அதை கிளப்பி தயாராக வைத்திருந்தான் அக்னி.

அவனுக்கு பின்னால் நீமோ அமர்ந்து இருக்க, கிளம்பி வந்த அருந்ததி எங்கே அமர்வது என்று தெரியாமல் யோசிக்கத் தொடங்கினாள்.

“நாயை வேணும்னா இங்கேயே விட்டுட்டு போகலாமா?” என்று கேட்டவளை அனல் தெறிக்க முறைத்துப் பார்த்தான் அக்னி.

“உன்னை எல்லாம் என்னோட பைக்கில் கூட்டிட்டு போக முடியாது… வேணும்னா உன் வீட்டு காரில் வா… இல்லைன்னா ஆட்டோவில் வா” என்று சொல்லி விட்டு அவன் நகர… வேகமாக வந்து அவன் பாதையை மறித்தாள்.

“எங்கே வரணும்னு சொல்லாமலே போறீங்களே?”

‘எங்கே வர சொல்லலாம்’ என்று அவன் யோசிக்க அந்த நேரத்தில் அருந்ததியின் மூளை மின்னல் வேகத்தில் யோசித்தது.

‘அவர் நம்ம ஊருக்கு புதுசு இல்லையா.. அதான் யோசிக்கிறார் போல’ என்று எண்ணியவள் வேகமாக ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலின் பெயரை சொன்னாள்.

“இங்கே இருந்து வலது பக்கம் போனா மெயின்ரோடு வரும். அங்கே இருந்து ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்தில் அங்கே போயிடலாம்… மதிய சாப்பாட்டு நேரம் ஆகிடுச்சு… அந்த ஹோட்டலில் இப்போ புட் பெஸ்டிவல் (Food FESTIVAL)நடக்குது. இந்நேரம் பஃபே ஆரம்பிச்சு இருப்பாங்க. எல்லா விதமான சாப்பாடும் கிடைக்கும்… சாயந்திரம் அப்பா கூட போகலாம்னு நினைச்சேன். பரவாயில்லை அதனால என்ன? இப்போ உங்க கூட வர்றேன். அப்புறம் அப்பா கூட போய்க்கிறேன்” என்று சொன்னவளை அவன் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஆக இப்போ கூட நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் யோசிச்சுக்கிட்டு இருக்க இல்ல… இவளை என்னோட தலையில் கட்ட எத்தனை பேர் சேர்ந்து சதி செய்றாங்க’ என்று எண்ணி ஆத்திரப்பட்டவன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு பேசினான்.

“உனக்கு கார் ஓட்டத் தெரியும் தானே?”

“ஓ.. நல்லா ஒட்டுவேனே… லைசன்ஸ் கூட….”

“ஒரு கேள்வி கேட்டா ஆமா இல்லைன்னு ஒத்தை வார்த்தையில் பதில் பேசிப் பழகு” என்று கறாரான குரலில் சொன்னவன் அவளை பார்த்து அலட்சிய கை அசைவுடன் பேசினான்.

“போய் காரை எடுத்துட்டு என்னை பாலோ பண்ணி வா”

“நான் முன்னாடி போறேன்… நீங்க என்னை பாலோ செஞ்சு…” என்று பேசிக் கொண்டே போனவள் அவனது முறைப்பில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“அந்த ஹோட்டலுக்கு உங்களுக்கு வழி தெரியுமோ என்னவோ.. அதான்… ஒரு உதவியா…”

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்… ஒழுங்கா சொல்றதை மட்டும் செய்” என்று சொன்னவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு நொடிகளில் கண்ணில் இருந்து மறைய அடித்து பிடித்துக் கொண்டு காரில் ஏறி அவனை பின் தொடர்ந்து ஓட்டிக் கொண்டு போனாள் அருந்ததி.

ஆனால் அவனோ அவள் சொன்ன பாதையை விடுத்து அதற்கு எதிர் திசையில் பயணிக்க… இந்தப் பக்கம் எங்கே போறார்? என்ற குழப்பத்துடன் அவனை பின் தொடர்ந்தாள் அருந்ததி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here