கட்டிலின் மூலையில் சுருண்டு படுத்து கிடந்த மாலினியை தொட்டு திருப்பினாள் நளினி.
“ மாலினி??”
அதீத கவலையோ இல்லை கோபமோ அந்நேரம் அவளின் அழைப்பு இப்படி தான் இருக்கும்.
“ சொல்லுக்கா?”
இவளின் மனநிலையும் சரியில்லா சமயமே இது போன்ற அழைப்பும் கூட.
“நான் என்ன சொல்லுறது? நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க?”
பதில் தெரிந்த கேள்வி தான் என்றாலும் அவளுக்கும் வேறு வழியில்லையே.
காஃபி ஷாப்பில் பேசி கொண்டிருக்கும் சமயம் நளினியின் செல்லுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
“ என் கதையை அவிழ்த்து விட்டது போதும். இன்னும் அரை மணி நேரத்தில நீ இங்க இருக்கணும். இதுக்கும் மேல நீ அங்க இருந்தா நடக்குறது வேற” என்று.
படித்து பார்த்து சிரித்து கொண்டவள் தங்கையின் சொல்படி மறு பேச்சு பேசாமல் வந்திருந்தாள்.
வந்தவள் நேராக இவளை தான் தேடினாள்.
‘ அம்மா வீட்டுல தங்குறதால கொஞ்சம் வசதியா போச்சு… இல்ல இந்நேரத்துக்கு எங்க? என்ன?னு ஏகப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் கணவர் வீட்டிற்கு’
அவளுக்கு இப்போது தங்கையின் மன அமைதியே முக்கியம்.
அதனாலே அவளை தேடி வந்தது.
“ ஒன்னுமில்லைக்கா, கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான்”
பொய்யும் இல்லாது உண்மையும் இல்லாது கூறினாள்.
“ சரியில்லாதது உடம்பா? மனசா?” சரியாக அவளை மடக்க
பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
“ விடுக்கா, முடிஞ்சதை பத்தி இப்போ எதுக்கு பேசிக்கிட்டு?”
“ முடிய வச்சதே நீ தானே மாலு” குரலில் லேசாக எட்டி பார்த்த கோவத்தில் அவள் கூற,
“ நளினி, இப்போ அது எதுவுமே தேவையில்லை. அவன் ராகவி புருஷன்.
அவ்ளோ தான்.”
“ அப்போ அடுத்தவ புருஷனை காலம் பூரா நினைச்சுகிட்டே காலத்தை ஓட்ட போற?” என்று கேட்க
வலி… மொத்த வலி… காதலின் ஒட்டு மொத்த வலி அவள் கண்களில்.
“ அக்கா…..”என்ற கேவலோடு அவள் மேல் சாய்ந்தாள்.
அவளின் முதுகை தடவி கொடுத்த நளினிக்கும் வலி தான்.
தங்கையின் எதிர்காலமே பொய்த்து போனதன் வலி.
“ முடியலக்கா… அவனை மறக்க முடியல.
அவனை நினைச்ச மனசுல வேற யாரையும் நினைக்க தோணலை.
என்னை இப்டியே விட்டுருங்க… எனக்கு இதுல தான் கொஞ்சம் நிம்மதி” என்று வழக்கம் போல பழைய பல்லவியை பாடினாள்.
“ தப்பு பண்ணது நான் தானேக்கா. அதுக்கான தண்டனை இதுன்னு நினைச்சுக்கிறேன்” அழும் குரலில் கூறினாள்.
“ சரி சரி, நாளைக்கு பேசிக்கலாம்… அமைதியா தூங்கு” என்று அவளை தட்டி கொடுத்த வண்ணம் இருக்க
தமக்கையின் தாயணைப்பில் மெதுவாக கண் செருகினாள்.
நீண்ட நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் நளினி திரும்பி பார்க்க
அவள் அன்னை கல்யாணி நின்று கொண்டிருந்தாள் கையில் பால் தம்ளருடன்.
“ ஒன்னுமே சாப்பிடல. அதான்” என்று கூறும் தாயை கண்டு
‘சிரிக்கவா? அழவா?’ என்று இருந்தது.
இவர் தான், பெற்ற மகளோடு ஐந்து ஆண்டுகளாய் பேசாமல் இருக்கிறார்…
என்று சொன்னால் யாரேனும் நம்புவரா?’
எப்போது மாலினி “தனக்கு திருமணம் வேண்டாம்” என்ற கொடியை தூக்கினாளோ அப்போது சொல்லி பார்த்தவர்…
இனி, “ அவள் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளாதவரை அவளிடம் பேசப்போவதில்லை” என்று கத்திவிட்டு தனக்குள் அடங்கி கொண்டார்.
பெற்றவளான அவரும் தான் என்ன செய்ய?
அதட்டி பார்த்தார் கேட்டபாடில்லை..
அன்பாய் கூற அசைந்த பாடில்லை…
இனி இதுவே முடிவென கூறிவிட்டார்.
தாய் எட்டடி என்றால் மகள் பதினாரேனும் பாய வேண்டுமே??
“ நீ கொண்ட கொள்கையில் நீ இரு. நான் கொண்ட கொள்கை எனக்கு” என்று அவளும் விடாமல் இருக்க நடுவினில் நளினியும் அவள் தந்தை வேலனும் தான் பொறியில் சிக்கிய எலியாகினர்.
கதிரும் ஓரளவிற்கு மாலினியை கேட்டு பார்த்தான்.
தாய் தந்தையரிடம் அமைதியாக படிந்து கூறியவள்
உடன் பிறந்தவரிடம் புலியாய் பிராண்டினாள்.
கடைசியில் வென்றதென்னவோ மாலினி தான்.
ஐந்து வருடங்கள் கடந்தும் பிடி கொடுக்காமல் அவளும் அவள் அன்னையும் எதிர் எதிர் துருவங்களாய்.
தூங்கி கொண்டிருந்த மாலினியிடம் பாலை புகட்டினாள் நளினி.
“ மாலு, வெறும் வயித்தோட படுக்காம கொஞ்சம் பாலை குடிச்சுட்டு படு” என்று கூற
“ வேணாம் நளினி” என்று தூங்கி கொண்ட படியே மறுத்தவளை
உருட்டி மிரட்டி புகட்டிய பின்பே விட்டாள்.
இருவரையும் பார்த்து கொண்டிருந்த கல்யாணி வழக்கம்போல,
“ அவ தான் உனக்கு பயப்படுறாளே… நீயாது எடுத்து சொல்ல கூடாதா?” என்று கேட்க…
“ ம்மா, உருட்டி மிரட்டி உண்ண தான் வைக்க முடியும். தாலி கட்ட வைக்க முடியாது” என்று கூறினாள்.
“ ம்ஹ்ம், என் பேச்சு இந்த வீட்டுல எங்க எடுபட?” என்று விரக்தி மூச்சு விட்டபடி நகர்ந்தாள்.
பால்கனியில் தூக்கம் வராமல் உலாவி கொண்டிருந்த நளினியின் முன் வந்தான் கதிர்.
“ அக்கா, அப்புறம் என்ன ஆச்சு? வசந்த்தும் மாலினியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புனாங்களா? அப்புறம் ஏன் பிரிஞ்சாங்க? சொல்லுக்கா???”
விடாமல் நச்சரிக்க…
“ கதிர், அது அவளோட தலையெழுத்து. அதும் முடிஞ்சு போச்சு.
நீ மது விஷயத்தை எப்டி வீட்ல சொல்லலாம்னு யோசி” என்று கூறினாள்.
“ அக்கா, இப்போ எனக்கு தெரிஞ்சாகனும்?” என்று குரலில் அழுத்தம் கொடுத்து அவன் கூற
‘ எப்படியும் விடமாட்டான்? தனக்கும் இதை யாரிடமாவது கூறினால் பாரம் குறையுமே!!’ என்று எண்ணியவளாய் கூறினாள்.
“ஹாய் அம்மா, எங்க உங்க பொண்ணு? ரெடி ஆகிட்டாளா?” என்றபடி வந்தாள் ரூபிணி.
இருவரும் பேசி கொண்டிருக்க மாலினி ரெடியாகி வந்தாள்.
“ ம்ம்… போலாம் ரூபி” என்று கூறிய மகளிடம்
“ எங்க போற? சாப்டுட்டு போகலாம்” கல்யாணி மறுத்து கூறி கொண்டிருக்கும் போதே
“ ம்மா, எனக்கு பசிக்கல… அந்த கல்லு குண்டை உன் பொண்ணுக்கு கொடு” என்று கத்தியபடி வாசல் கேட்டை நெருங்கி இருந்தனர்.
வாசலில் அவளின் தந்தை வேலன்
“ என்னமா? காலேஜ் கிளம்பியாச்சா?” என்றபடி வந்தார்.
“ ஆமாப்பா… போயிட்டு வரேன்” என்று அவரிடம் முடிந்த மட்டும் கொஞ்சி விட்டு இருவரும் ரூபிணியின் ஸ்கூட்டியில் கிளம்பினர்.
“ என்னடி ஒரு மாதிரி இருக்க?” மாலினி கேட்டாள்.
“ இல்லையே.. நல்ல தான் இருக்கேன்” என்று ரூபிணி பதில் கூற அவள் நம்பமால் பார்த்தாள்.
“ எனக்கு தெரியாதா? ரெண்டு மூணு நாளாவே நீ என் கிட்ட சரியா பேசல. வீட்ல ஏதும் ப்ராப்ளமா?”
“ இல்ல”
“ பின்ன, என் மேல எதும் கோவமா?”
“ ஆமா”
“ என்ன ஆமாவா? நான் என்னடி தப்பு செஞ்சேன்”
“ நீ ஒரு தப்பும் செய்யல”
“ லூசாடி நீ? ஒரு தப்பும் செய்யாத என் மேல உனக்கு என்ன கோவம்?”
மெலிதாய் சிரித்த ரூபிணி,
“ ஒரு தப்பும் செய்யாதவங்க மேல கோவப்படுறவங்க லூசுனா??
அப்போ நீ?”
‘அவள் என்ன கூறுகிறாள்?’ என மாலினிக்கு விளங்க அமைதியாக இருந்தாள்.
அவளும் தான் என்ன செய்ய??
அவனை கண்டதும் மூளைக்குள் ஒரு மணி.
‘இவனிடம் நெருங்காதே’ என்ற குரல்.
சொல்லப்போனால் என்னவென்றே தெரியாத ஒரு பயம்!!!
அதனாலேயே அவனை காணும் இடம் தோறும் எரிந்து கொண்டிருந்தாள்.
அதை அப்படியே ரூபிணியிடம் ஒப்பிக்க அவளுக்கு புரியாத ஒன்றை ரூபிணி புரிந்து கொண்டாள்.
இவள் மனம் அவன்பால் சரிய தொடங்குகிறது.
எப்போதும் மனமும் மூளையும் எதிர் எதிர் திசையில் தான் செயல்படும்.
மனம், தன்னிலையில் விடாமல் இருக்க இறுதியில் மூளை தான் விட்டு கொடுக்க வேண்டி வரும்.
சில சமயங்களில் சிலருக்கு மூளை நிதர்சனத்தை அடித்து கூற மனம் வேறு வழியின்றி விட்டு கொடுக்க வேண்டி வரும்.
‘அப்படி ஒரு இக்கட்டில் தான் தன் தோழி மாட்டி இருக்கிறாள்.
இதை அவள் உணரும் நேரம் வெல்வது…
அவள் மனமா? மூளையா?’
சிந்தையில் மூழ்கியபடி இவள் இருக்க ரூபிணி அறியவில்லை.
மாலினி என்றோ? எப்போதோ? ‘அவளின் மனம் சொன்ன பேச்சை அறிந்து கொண்டாள்’ என்பது.
ஆனால் அவள் மனதின் பேச்சிற்கு உடன் பட மறுத்து வருகிறாள்.. என்பதை யார் அவளிடம் தெரியப்படுத்த??
இருவரும் தம் சிந்தனைகளில் உழன்ற படி கல்லூரியை அடைந்தனர்.
கல்லூரியில் கூட மாலினியின் மனதில் ரூபிணி கேட்டதே நிழல் ஆடியது.
‘ உண்மையில் அவன் என்ன தப்பு செய்தான். அவன் மேலே கோவம் கொள்வதற்கு???
பாவம் அவன்!!!
அடுத்த முறை அவனிடம் கோவம் கொள்ளாமல் முடிந்த மட்டும் தள்ளி நிற்க வேண்டும்’ மனதில் முடிவெடுத்து கொண்டு வகுப்பை கவனிக்க தொடங்கினாள்.
ஆனால் அவளின் அந்த முடிவை அவளே தகர்த்தெறிந்து அவன் மேலான காதலை வெளி கொணர போகிறாள் என்பதை அவள் அறியவில்லை.
***
இங்கு நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டிருந்த வசந்திடம் அவன் நண்பன் விஷ்ணு கேட்டான்.
“ மச்சி, அந்த பொண்ணு தான் உன்னை கண்டாலே காண்டாகுறாளே… அப்புறம் ஏன் அவ கிட்டயே வம்பு வைக்குற?”
நண்பனுக்கு பதில் சொல்லாமல் அவன் சிரித்து வைத்தான்.
“ என்னடா? சிரிப்பே சரியில்ல… லவ் பண்றியா???”
இப்போது வசந்திடம் வெட்கம் கலந்த சிரிப்பு…
“அது சரி பார்த்த கொஞ்ச நாள்லயே லவ்வோ? அதுவும் அவ உன்னை கண்டபடி கரிச்சு கொட்டினாலும்???” என்று நக்கலாய் கேட்டான் விஷ்ணு.
அதற்குள் ஒருவன் அவர்கள் அருகே வந்து,
“ வசந்த், எல்லாமே ரெடி… நீங்க ரெடியா? பாட்டு சூஸ் பண்ணியாச்சு தானே?”
ஆம், இவனுக்கும் பாட்டு என்றால் உயிர்.
மாலினியின் கோ சிங்கர்…
ஆனால் அவளுக்கு தெரியாத படி பார்த்து கொண்டான்.
எப்படியும் சில காட்சிகளுக்கு அவனும் அவளும் தனியாக தான் பாட வேண்டி இருப்பதால்…
“இப்போதைக்கு அவளிடம் சொல்ல வேண்டாம்” என கேட்டு கொண்டதால் அவர்களும் கூறவில்லை.
“ரெடி.. ஒன்… டூ…” கையில் த்ரி என சைகையிட்டு அவனிடம் பாட சொன்னான் ஒருவன்.
தொண்டையை கனைத்து பாட ஆரம்பித்தான்.
உதடு கூட்டி விசில் அடித்து
ஹம்மிங் செய்தவன்,
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
‘அவன் பார்வை விஷ்ணுவிடம்…’
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவது தானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல்
அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹேய்…
விஷ்ணுவிடம் விழியை தூக்கி கேள்வி எழுப்பியவாறே
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா
சீனியர் அழைத்ததால் அங்கு வந்த மாலினியும் அவன் குரலில் தன்னை மறந்து நின்றாள்.
அவளை கண்டு ஒரு முறை அதிர்ந்தாலும் அடுத்த நொடியே சரணம் பிடித்து பாட தொடங்கினான்.
கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும் போது மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே
அவன் பார்வை அவளிடமே தஞ்சம்…
உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல்
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
தேன் போன்ற அவன் குரலில் மயங்கி நின்றாளா??
இல்லை அதன் வரிகளிலா???
இல்லை அதன் வழியே அவன் சொன்ன செய்தியிலா???
சிலையாய் சமைந்து நின்றவளின் தோளை ரூபிணி தொட நிகழ் மீண்டாள்.
தொடர்ந்து வந்த அவன் பாட்டிலே அவள் மனம் திரும்ப அவளோடு சேர்த்து ரூபிணியும் அவனையே பார்த்தாள்.
கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை
ஓர் நொடி அவன் அப்படியே நின்று விட்டான்.
அடுத்த வரியை பாடாமலே.
“ என்ன ஆச்சு வசந்த்? நல்ல போயிட்டு இருக்கு நிப்பாட்ட வேண்டாம். கண்டினியூ பண்ணுங்க”
எதிரில் ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்தவன் கூற அவன் பார்வை அங்கும் இங்கும் இல்லாமல் மொத்தமாய் அவளிடம்….
பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும்
கண்ணடித்து அவன் பாட மாலினியின் முகம் வெட்கம் பூசி கொண்டது.
அதையே அவனும் தனக்கான பதிலாய் எடுத்து கொண்டான்.
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
தடதடவென அனைவரும் கை தட்ட சிரிப்புடன் அதை ஏற்று கொண்டான்.
அவன் பார்வை அவளிடம்…
‘இதற்கு உன் பதிலென்ன?’ என்பது போல்
அவள் அவன் பார்வையை சந்திக்க வெட்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.
பின்னாடியே ரூபிணியும்.
நாட்களும் நகர இவர்களின் இந்த காதலும் நகர்ந்தது.
ராகவிக்கு மாலினியின் மேலான பகையை தீர்க்க சரியான சமயம் கிடைத்து விட்டதாய் எண்ணினாள்.