படுக்கையில் விழுந்தவனால் தூக்கத்தை தன் வசம் கொண்டு வர முடியவில்லை. அவன் எங்கு திரும்பினாலும் நிர்பயாவின் முகமே தெரிந்தது. அவளின் சிரிப்பும், கோபமும் அவனை பாடாய் படுத்தி எடுத்தது.
நித்யன், “ஏன்டி என்ன புரிஞ்சிக்கவே மாட்டேன்ற? உன்ன முதன்முதலாக காலேஜ்ல பாத்த போது எனக்கு நீ தான் சரிபட்டு வருவன்னு தோன்றியது. அதிலிருந்து உன்கிட்ட பேச முயற்சி பண்றேன். ஆனால் என்னால முடியல. என்ன தான் கோர்ட்ல நான் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாலும் உன்ன பார்த்தா மட்டும் வாயடைத்து போய்டுறேன். என்னை என்னடீ பண்ண என் செல்ல ராட்சசி ? கொஞ்ச நாள் உன்ன பின்தொடர்ந்தேன் அப்பறம் சில வேலைகளால உன்ன பாக்க முடியாம போச்சி. அதுக்கு அப்புறம் உன்ன என் வீட்ல பார்த்த பொழுது எனக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது. சரி இந்த சந்தர்ப்பத்திலாவது என்ன அன்ப உன்கிட்ட புரிய வைக்கனும். அதுக்காக நான் உனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் உன்ன ஏமாத்திகிட்டு இருக்கேன். பட் நீ கோபப்பட்டாலும் என் அன்பு உன்ன மாத்தும்னு எனக்கு தெரியும் என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தவனை ஓங்கி ஒன்று வைத்தான் கிரிஷ். நித்யனின் நெருங்கிய நண்பன், டாக்டர்.
கிரிஷ், “ஏய் நீ இன்னும் நிர்பயா கிட்ட லவ்வ சொல்லலையா ?
நித்யன்,” எங்கடா, மத்தவங்க முன்னாடி சிங்கம் மாதிரி இருக்கேன். இவ எதிர்ல வந்தா மட்டும் முயல் குட்டியா மாறிடுறேன். இன்பேக்ட் இந்த கேஸ்னால தான் இப்ப கொஞ்சமாவது பேச ஆரம்பிச்சி இருக்கேன்.
கிரிஷ், “அட கடவுளே, இன்னுமாடா நீ அவள பாத்து கிட்டதட்ட ஐந்து வருஷம் ஆயிருக்குமேடா.
நித்யன்,” ஆமாடா, அது எப்படிடா நீ கரெக்டா கணக்கு வச்சி இருக்க? என் மேல அவ்வளவு அன்பா?
கிரிஷ், ” அன்பாவது, மண்ணாவது நீ இத்தனை வருஷமா இத தான சொல்லி சாக அடிக்கிற. பின்ன கொடுமைய அனுபவிச்ச நானே ஞாபகம் வச்சிக்காம இருந்தா எப்படி ?
இவ்வாறு நண்பர்கள் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அங்கே நிர்பயாவோ கடும் கோபத்தில் இருந்தாள் .
நிரஞ்சனா,” என்னடி ஆச்சு?எதுக்கு இப்படி கோபமா இருக்க?
நிர்பயா,” எதுவுமே தெரியாத மாதிரி கேட்குற அவங்களோட அக்ரீமெண்ட்ட நீயும் தானே பார்த்த? ஊருக்குப் பொதுவாய் இருக்க ஏரி அவங்களுக்கு மட்டும் சொந்தமாகுமா எப்படி விட முடியும்?
நிரஞ்சனா,” ஏய் அதுக்கு தானே கோர்ட்ல கேஸ் போட போற? அங்க பார்த்துக்கலாம். நீ இந்த மாதிரி பெரிய கேஸுக்கு நீ போனது இல்லை தான். இப்ப தான் சின்ன கேஸ்லாம் வாதாடி ஜெயிச்சி இருக்க. பெரிய இடமாச்சேன்னு நீ என்ன பயப்படுவா போற? உனக்கு சின்ன வயசுல இருந்தே தைரியம் அதிகம். இப்ப இந்த கேஸ நித்யன் கூட சேர்ந்து நடத்த போறோம். அவர் கண்டிப்பா இத ஜெயிச்சி குடுப்பாரு பாரு. ஊருக்காக இல்லைன்னாலும் உனக்காக என்று அவளின் கோபத்தை கட்டுபடுத்த எண்ணி பேச்சின் போக்கை மாற்றினாள்.
அவனின் பெயரை கேட்டதும் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போன்று உணர்ந்தாள் நிர்பயா. அவளை மொய்கும் மற்ற ஆடவர்களின் கண்களை துச்சமென எண்ணி நகர்ந்தவளால் நித்யனின் பார்வையை அவ்வாறு ஒதுக்க முடியவில்லை. அவனின் பார்வையில் ஏதோ ஒர் ஈர்ப்பை உணர்ந்தாள். ஆனால் அதை வெளிக்காட்ட அவளுக்கு விருப்பமில்லை. எதனாலையோ அவனிடம் உள்ள ஈர்ப்பை மறைக்க எண்ணினாள். அந்த நேரம் அவளின் மூளை ஒன்று யோசித்தது. அதை மறுநாள் அவனை பார்க்கும் போது செயல்படுத்த எண்ணினாள். அதை பற்றி நிரஞ்சனாவிடமும் சொன்னாள்.
நிரஞ்சனா, ” சரி நாளைக்கு கேஸ் பைல் பண்ணிட்டு வரும் போது இத எக்ஸிகியூட் பண்ணி பார்ப்போம். ரிசல்ட் அப்ப தெரியும்.
மறுநாள் காலை சியாமளாவின் அர்ச்சனைகளுடன் விடிந்தது.
சியாமளா,” எப்ப பாரு அக்காவும் தங்கச்சியும் கூடிக் கூடி பேசுகிறாங்க. பெரியவங்க சொல்றத கேக்குறதும் இல்லை. அவளாவது கல்யாணம் ஆன பொண்ணு. இந்த சின்ன குட்டிக்கு இவ்வளவு கொழுப்பு ஆகக்கூடாது வீட்டை எத்தனை பேர் சொல்கிறோம், ஏதாவது கேட்கிறாளா ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் பொண்ணு ஏன் இப்படி வளத்து வச்சிருக்கீங்க என்று கேட்கிறாங்க. கேட்கறவங்களுக்கு எல்லாம் நான் என்ன பதில் சொல்றது? நாங்க அப்பவே சொன்னோம். யாராவது எங்க பேச்சை கேட்டாங்களா? பசங்க ஆசை தான் முக்கியம்னு ஒருத்திய ஏதோ பழைய பொருள் எல்லாம் கண்டுபிடிக்கிறேனு மண்ணை கிண்டிக்கிட்டு இருக்கா. இன்னொருத்தி என்னடான்னா அடுத்தவங்க பிரச்சனைல மூக்க நுழைக்கறதுக்காகவே வக்கீல் படிப்பை எடுத்துப் படிச்சா. பொம்பள புள்ளைங்கள ஏதோ படிச்சமா கொஞ்ச நாள் வேலைக்கு போனாமா? வீட்டு வேலை கத்துக்கிட்டோம்மானு இல்ல. பெரியவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கே பெரும்பாடு பட்டாச்சி. அவளோட வேலை பார்த்துக்கிட்டு இருந்தவரே கல்யாணம் பண்ணிக்க முன் வந்ததுனால ஒரு அளவு பிரச்சனை இல்லாமல் போச்சி. அவளோட அமைதி பிடிச்சு கல்யாணம் பண்ணிக்க முன்வந்தார். ஆனால் சின்னது அப்படியா? ஊர்ல இருக்க சண்டை எல்லாம் வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு வரா. இவள ஒருத்தர் கிட்ட பிடிச்சு கொடுக்கறத்துக்குள்ள நான் என்ன ஆகப் போறோம்ன்னு தெரியல என்று பக்கத்து வீட்டு பெண்மணியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
நிர்பயா,” அக்கா என்னவாம் அம்மாவுக்கு காலையிலேயே ஆரம்பிச்சுட்டாங்க.
நிரஞ்சனா,” எல்லாம் உன்னையும் என்னையும் பத்தி குற்றப்பத்திரிக்கை தான்.
நிர்பயா,” இதெல்லாம் காதுல வாங்கினா நம்ம வேலை தான் கெட்டுப் போகும். நீ சீக்கிரம் கிளம்பி அக்கா நமக்கு நிறைய வேலை இருக்கு. நித்யன் கோர்ட்டுக்கு வந்துட்டாரான்னு
கால் பண்ணி கேட்கணும்.
அவள் சொன்ன விதத்தை கண்டு சிரித்தபடியே தயாராகி வந்தாள் நிரஞ்சனா.
நிரஞ்சனா,” லாயர் மேடம், நான் ரெடியாயிட்டேன் நீங்க போய் ரெடியாய் வரீங்களா? கனவிலே மிதக்காதீங்க.
அவளை முறைத்துக்கொண்டே தயாராகி வந்தவள் நித்யனுக்கு கால் செய்தால் அது காத்திருக்க சொல்லவும் அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த முகம் மாறியது. அதற்கான காரணத்தை உணர்ந்தவளாய் நிரஞ்சனா அழுத்தமாக தோளைப் பற்றினாள்.
காலை பத்து மணி கோர்ட்டு வளாகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நித்யனுக்காக காத்திருந்தவளுக்கு நிமிடங்கள் யுகமாய் கழிந்தது. அந்த நேரம் அங்கு வந்த ஒரு கார் அவளை உரசியபடி நின்றது. அதில் தோரணயாக வந்திறங்கினார் தசரதன்.
தசரதன், “என்ன பாப்பா? சீக்கிரம் வந்தாச்சு போல? இந்த கேஸ் மேல அவ்வளவு ஆர்வமா? என்ன தோற்கடிக்க முடியும்னு நீ நினைக்கிறாயா? என் கிட்ட இருக்க பணம் யார வேணும்னாலும் விலைக்கு வாங்கும். உனக்கு சாதகமா வர நிலைமைல கூட என்னால எது வேண்டுமானாலும் பண்ண முடியும் என்று திமிராய் பேசியவரை கண்டு சிரித்தாள் நிர்பயா. அவள் சிரிப்பில் இருந்த அர்த்தத்தை அவரால் உணர முடியவில்லை. குழம்பி தவித்தார்
அவரின் முகத்தில் குழப்பத்தை கவனித்தவள்,
நிர்பயா, ” என்ன சர்? உங்க முக போற போக்கே சரி இல்லையே? ஏதாவது பிரச்சினையா? இல்ல இந்த கேஸ் என்ன ஆகபோகுதோனு பயமா? ஆமா எங்க உங்க லாயர் ஆளையே காணோம்? இப்பவே இப்படின்னா பாத்துக்கோங்க. இன்னும் ஒரே கேள்வி கேட்கவா?
தசரதன்,” சினத்துடன், என்ன என்றார்.
நிர்பயா, ” ஸ்டே பெட்டிஷன் போட உங்க லாயர் வந்தா போதுமே? நீங்க ஏன் சர் இந்த வேகாத வெயில்ல அலையிறீங்க? வயசான காலத்துல வீட்ல இருக்க வேண்டியது தானே? என்று அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் செல்பவளை பார்த்து கொண்டு நின்றார் தசரதன் கூடவே இன்னொரு நபரும்.
அதன் பின்னர் நித்யன் அங்கு வர அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் கூல்டிரிங்ஸ் கம்பெனி தங்கள் ஊருக்கு வர கூடாது அதற்கான நிறுத்தி வைப்பு ஆணையை வழங்க கேஸ் தொடரப்பட்டது.
நிறுத்தி வைப்பதற்கான விசாரணை அடுத்த வாரத்தில் நடக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நிரஞ்சனாவும், நிர்பயாவும் அடுத்த வேலையை தொடங்கினர்.
நேராக நித்யனிடம் சென்ற நிரஞ்சனா, ஹலோ சர் உங்க கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன் என்றாள்.
நித்யன், ” சொல்லுங்க, என்ன விசியம்?
நிரஞ்சனா,” என் தங்கச்சி நிர்பயா ஒரு பையன பார்க்காமலே லவ் பண்றா. அவன் எங்க பேமிலில இருக்கவங்க கிட்ட கூட பேசி இருக்கான். கிட்டத்தட்ட இரண்டு வருஷமா இவங்க லவ் பண்றாங்க என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள். அதில் கோப ரேகைகள் வெளி வர தொடங்கின. இவள் பேசாமல் நிற்பதை கண்டவன்
நித்யன், ” அப்பறம் என்ன ஆச்சு? ஏன் அமைதியா இருக்கீங்க?
நிரஞ்சனா” மனதிற்குள் சிரித்துக் கொண்டு, இப்ப என்ன பிரச்சினைன்னா அவன் கடந்த இரண்டு வாரமா பேசவே இல்லையாம். கடைசியா நேற்று இரவு அவனுக்கு கால் பண்ணப் போது இங்க பக்கத்துல இருக்க பார்க்குல மீட் பண்றேன்னு சொல்லி இருக்கானாம். அதுல அவ கொஞ்சம் டென்ஷனா இருக்கா. பர்ட்ஸ்ட் டைம் மீட் பண்ண போறா இல்லையா? இப்ப நீங்க என்ன பண்ணணும் ன்னா அதாவது நீங்க ப்ரீயா இருந்தா அவ கூட்டிக்கிட்டு பார்க்குக்கு போய்ட்டு வர முடியுமா?
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன், நான் என்ன அவளுக்கு பாடிகார்டா எனக்கு வேலை இருக்கு. கொஞ்சம் கேஷுவலா பேசிட்டா உங்க தங்கச்சிக்கு எடுபிடி வேல கூட செய்ய சொல்வீங்க போலையே? இப்ப கூட அவளுக்கு ஹெல்ப் வேணும்னா அவ தானே கேட்கனும்? நீங்க என்ன தூது புறாவா? போங்க என்னால முடியாது என்று பொரிந்து தள்ளினான் நித்யன்.
நிரஞ்சனா நிர்பயாவிடம் அவன் அறியாதவாறு சமிக்ஞை செய்ய அடுத்த நொடி அவன் முன் நின்றாள் அவன் ஆசை நாயகி.
நிர்பயா, “நித்யன், ப்ளீஸ் அவன நான் இப்ப தான் மீட் பண்ண போறேன், அக்காவுக்கு சைட்க்கு போகணுமாம். ரொம்ப நர்வெஸா இருக்கு. நீங்க வாங்களேன் என்று அவள் குழந்தைதனமாய் கேட்ட விதம் அவனையும் அறியாமல் தலையாட்ட வைத்தது.
இவள் சந்தோஷத்திலும், அவன் கோபத்திலும் இரு வேறு யோசனைகளோடு அந்த பயணத்தை தொடர்ந்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவள் சொன்ன பார்க்கை அடைந்தனர். அந்த உச்சி வெயிலிலும் குளிர்ச்சியாக இருந்தது அவ்விடம். கண்களுக்கு குளிர்ச்சியாய் வண்ண வண்ண மலர்கள், செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் என்று அழகாய் இருந்தது.
இதை எல்லாம் இரசித்தவாரே நிர்பயா செல்ல, அவள் பின்னே அடக்க முடியாத கோபத்துடன் வந்தான் நித்யன்.
பார்க்கும் ஆடவர்களை எல்லாம் எடை போட்டான். ஐயோ இவனா இருக்க கூடாது, இல்ல இல்ல அவன் வரவே கூடாது என்று கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான் நித்யன்.
ஆனால் அந்த நேரம் நெடியவன் ஒருவன் நிர்பயா இருக்கும் பக்கமாக சிரித்தபடி வந்து கொண்டிருந்தான்.
தொடரும்…