ஆபீஸ் சென்ற அபய்க்கு நேரம் சரியாக இருந்தது இத்தனை நாள் வேலை அனைத்தையும் தனி ஒருவனாக பார்க்கவேண்டியதாயிற்று…
இப்போது தான் மகி இல்லையே என்று உணர்ந்தான்…இன்னேரம் அவள் இருந்திருந்தால் வேலை பாதியாக குறைந்து இருக்கும்…
வீட்டில் மகியோ அக்மார்க் மருமகளாக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருந்தாள்….
அவ்வப்போது பாட்டியிடம் அவனின் கடந்தகால வாழ்க்கையை பற்றியும் தெரிந்து கொண்டாள் அந்த வீட்டில் பாட்டி மட்டுமே அவளுக்கு ஆதரவு…
பாட்டியோ அவன் உண்மையாவே அன்பானவன் தான்.. ஆனால் சின்ன வயசிலேயே அவன் பட்ட காயம் அவனை இந்த அளவுக்கு கடுமையாக மாத்திருச்சு… நீ தாம்மா ஒரு நல்ல மனைவியாக இருந்து அவனை பழைய மாதிரி கொண்டு வரணும் அவன் பழைய மாதிரி ஆனா அவங்க தாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாரு என்றார்…
அபய் தனியாக இருந்து அனைத்து வேலையும் முடித்தவன்… குடித்து விட்டு வீடு வந்து சேர இரவு ஆயிற்று….இரவு வரை உறங்காமல் அவனுக்காக காத்திருந்தவள் அவன் வரும் கோலத்தை கண்டவுடன் தூக்கிவாரி போட்டது அவளுக்கு…
தள்ளாடியபடியே வீட்டுக்குள் நுழைந்தவன் டைனிங் டேபிளில் அவள்அமர்ந்திருப்பதை பார்த்து அவனும்அருகில் வந்து அமர்ந்தான்.. அவளும் எதுவும் பேசாமல் பரிமாறத் தொடங்கினாள்… அவள் பரிமாறியதை கொஞ்சமே உண்டு முடித்தவன் எழ முடியாமல் தடுமாற மகியே அவனைத் தாங்கிப் பிடித்து ரூமிற்கு அழைத்துச் சென்றாள்…
ரூமிற்கு அழைத்துச் சென்று அவனை படுக்க வைத்தவள் வழக்கம்போல் தனக்குரிய இடத்தில் தானும் உறங்கிப் போனாள்…
அடுத்த நாள் காலை மகி கீழே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பாட்டி வந்து அவளைப் பார்த்து,”அம்மாடி இன்னைக்கு நீங்க மறுவீடு போங்க நான் அவன் கிட்ட சொல்லிக்கிறேன் என்றார்.. மகியும் அவருக்கு சரினா எனக்கு ஓகே பாட்டி என்றாள்..
வழக்கம்போல் காலையில் அவனுக்கு காபி கொடுத்து விட்டு அவனிடம் எதுவும் பேசாமல் கீழே இறங்கி வந்து விட்டாள் மகி…
ஆபீஸ் போக ரெடியாக கீழே வந்தவனிடம், பாட்டி “டேய் கண்ணா இன்னிக்கு நீங்க மறுவீடு போங்க..”என்றார்
அபய்,”இல்ல பாட்டி எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு…என்னால எங்கேயும் போக முடியாது”என்றான்…
பாட்டி,” இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்பா… கண்டிப்பாக நீங்க போயி தான் ஆகணும் அதனால நீ போகும் போது மகியை அவங்க வீட்டுல விட்டுவிட்டு ஆபீஸ் போ…. ஈவினிங் கொஞ்சம் சீக்கிரமா அவங்க வீட்டுக்குப் போ…இன்னிக்கு அங்க இருந்துட்டு நாளைக்கு அங்கிருந்து திரும்பி வாங்க… என்றார்…
பாட்டியிடம் சரி என்றவன் மகியை பார்க்க…அவளோ அமைதியாக நின்று இருந்தாள்.. டேய் அவ எதுவும் சொல்லல நானா தான் உங்களை போக சொன்னேன் என்றவர் மகியிடம் நீ போய் கிளம்புமா என்றார்…
மகி மேலே சென்று ரெடியாகி வந்தாள்… அவளை பிக்கப் செய்து கொண்டு சென்ற அபய் அவளிடம் நான் வெளியவே உன்ன இறக்கி விட்டுட்டு போறேன் நீ போ என்றான்… மகியோ நீங்க இவ்ளோ தூரம் வந்துட்டு உள்ள வரலனா அவங்க சங்கடப்படுவாங்க.. உள்ளே வந்து மரியாதைக்கு 2 வார்த்தை பேசிட்டு போங்க என்றாள்…
அவளிடம் பதில் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக வந்தவன்…அவளது வீட்டில் அவளை இறக்கிவிட்டு தானும் இறங்கி வந்தான் அவர்கள் இருவரையும் ஆரத்தி இட்டு வரவேற்றனர் முத்து தம்பதியினர்… அவளை பார்த்த உடன் அவளது தம்பி பிரபு,அக்கா என்று ஓடி வந்து கட்டிப் பிடித்தான்…
அவளும் தன் தம்பியை பார்த்தவுடன் குழந்தையாக மாறி போனாள்… ஹே குட்டிபிசாசு நான் போயிட்டேன்னு நிம்மதியா இருந்தியா …இரு திரும்பி வந்துட்டேன் என்று அவளுடைய தம்பியை சீண்டிக் கொண்டிருந்தாள்…
மகியின் தம்பி பிரபுவோ,”போக்கா நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சிருச்சு நீ தான் அங்க மாமா கூட ஜாலியா இருக்க என்றான்…
இவர்கள் இருவரையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அபய்..
பின்னே சற்று நேரத்தில் முத்துவிடமும் அன்புவிடமும் எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு அதான் அட்டெண்ட் பண்ணி விட்டு நான் ஈவினிங் வரேன் என்றான்… அதற்குள் அன்பு ஜூஸுடன் வெளியே வந்தவர்..,”மாப்பிள்ளை இந்த ஜூஸை மட்டும் குடிச்சிட்டு போங்க மதியம் சாப்பாட்டுக்கு நம்ம வீட்டுக்கு வந்திடுங்க” என்று அழைப்பு விடுத்தார்..
அபய்,”சரிங்க ஆன்ட்டி கண்டிப்பா வரேன்” என்றவன்… முத்துவிடவும் விடைபெற்றுக்கொண்டு மகியிடம் கண்ணசைத்து விட்டு ஆபீஸ் சென்றுவிட்டான்…. இந்த கண்ணசைப்பும் முத்து தம்பதியினருக்காகவே….
இங்கோ மகி அவளது தம்பியுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாள்.. என்ன இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு பிறந்த வீடு சொர்க்கம் தானே… அன்புவும் அவளிடம் எந்த வேலையும் வாங்காமல் அவரே மகளுக்கும் மருமகனுக்கும் ஓடி ஓடி சமைத்துக் கொண்டிருந்தார்…
பெரியவர்களின் பேச்சுக்காக மதிப்பு கொடுத்து மதிய விருந்துக்கு வந்தவன் வீட்டிற்குள் நுழைய அவரை வரவேற்றார் அன்பு.. பின்பு அவர் மகியை அழைக்க அவளிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே அன்பு உக்காருங்க மாப்பிள்ளை நான் போய் அவளை கூப்பிட்டு வரேன் என்றார்…
அவரை தடுத்த அபய்,”நீங்க போய் உங்க வேலைய பாருங்க ஆண்ட்டி நான் போய் பார்த்துக்குறேன்”என்றான்…
அவரிடம் கூறியதற்காகவே மகன் அறைக்குள் நுழைந்தான் அபய்.. அங்கே மஞ்சத்தின் மேல் அழகுப் பதுமை போல் துயில் கொண்டிருந்தாள் மகி.. அதை கண்டவனுக்கு இவள் இத்தனை அழகா என்றிருந்தது… அவன் மனதில் இத்தனை நாள் இவளை காயப்படுத்தி விட்டோமோ என்ற சிறு சங்கடமும் இருந்தது பின்பு அவளை எழுப்பாமல் அந்த ரூமை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்..
அந்த ரூமில் அவள் வரைந்த அழகு வண்ண ஓவியங்கள் சுவற்றில் தொங்க…அலமாரியில் அவள் படித்த புத்தகங்கள் மற்றும் துணி மணி வைக்க தனி அலமாரி என்று நடுத்தர குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் கச்சிதமாக இருந்தது… அந்த ரூமை அவளுக்கு ஏற்றார் போல் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள்..
அதில் பழைய காலத்து போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருந்தது… அதில் அபயின் தந்தை சேகர் மற்றும் முத்துவின் பால்யகால புகைப்படங்களும் இருந்தன…. அதற்கடுத்த பேஜில் அபய் மற்றும் மகியின் சிறுவயது புகைப்படங்களும் இருந்தன… சிறுவயதில் இரு குடும்பங்களும் ஒன்றாக இணைந்த போது எடுத்த புகைப்படங்கள் அப்போது மகி கைக்குழந்தையாக அன்புவின் கையில் இருந்தாள்… அந்த குழந்தையின் கையை பிடித்திருந்தான் 5 வயது சிறுவன் அபய்…
அதை எல்லாம் நோட்டம் விட்டு கொண்டிருந்தான் அபய்… அந்த சமயத்தில் மகி வீட்டின் குட்டி வாண்டு ஓடி வந்து அவளை எழுப்புவதற்காக கையில் கொண்டு வந்த ஜக் நீரை அவள் மீது ஊற்றினான்…அரண்டு எழுந்த மகி அபய் அந்த அறையினுள் இருப்பதை காணாமல் மல்லுகட்ட தொடங்கினாள்… டேய் இம்சை என் மேல ஏன்டா தண்ணி ஊத்துன… அம்மா இங்க பாருங்களேன் என்று அவள் கத்த அவன் தம்பி பிரபுவோ இன்னும் ஏன் அம்மானு கத்துற அதான் உனக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாச்சுல உன் புருஷன் பேரு சொல்லி கத்து என்றான்…
ஹே என்ன கொறங்கே??? போடாங் என் அத்தான் மட்டும் வந்தாரு மகனே நீ காலி… என் பொண்டாட்டியையா எழுப்புனனு உன்ன
துவம்சம் பண்ணிருப்பாரு..என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்…
இருவரும் சிறு பிள்ளை போல் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதில் மூழ்கியதால் அந்த 6 அடி ஆண்மகனை கவனிக்காமல் போயினர்…அதற்கு தகுந்தாற்போல் பகலில் தூங்குவதற்காவே ரூமில் அனைத்து ஸ்க்ரீனையும் இழுத்துவிட்டு இருட்டாக்கி இருந்தாள் மகி…
அக்கா தம்பி இருவரும் சண்டையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற ஒருவர் மீது ஒருவர் பொருள்களை வீச தொடங்கினர்.. மகியும் கபோர்டில் இருந்த ஸ்மைலி பில்லோவை எடுத்து வீச அதற்கடியில் இருந்த கவர் பொத்தென்று விழுந்தது… அந்த பில்லோவை கேச் செய்து அவளை பாத்து வக்கனைத்துவிட்டு ஓடினான் பிரபு… அவனை பிடிப்பதற்காக ஓட தொடங்கிய மகி கீழே இருந்த தண்ணீரில் கால் வைத்து வழுக்கி விழ போக அவளை விழாமல் அழகிய பூக்குவியலாய் தாங்கியது அந்த ஆறடி ஆண்மகனின் வலிய கரங்கள்… அது தன்னவனுடைய தீண்டல் என்பதில் மெய் சிலிர்த்து போனாள் மங்கை அவள்….