மின்னல் விழியே குட்டித் திமிரே – 10

0
836
1551018907221|679x452

மின்னல் விழியே – 10

பார்ட்டி நடக்கும் இடத்தில் திருவை காணததால் எதிர்ப்பக்கம் இருந்த தோட்டத்தில் பார்க்க சொல்லி வினுவின் உள்ளுணர்வு தூண்ட, தோட்டத்தை நோக்கி சென்றாள்…. அவள் உள்ளுணர்வு சொல்லியது போல் அவன் அங்கு தான் இருந்தான் ஆனால் போதையில் ஏதோ உளறியபடி ஒரு மரத்தை சுற்றிக் கொண்டிருந்தான்…

அவனை பார்த்ததும் நிம்மதியானவள்., அவனின் செய்கையை பார்த்து.,

‘என்ன இவன் கல்யாண வரம் கேட்குற மாதிரி மரத்த சுத்திட்டு இருக்கான்…’ மனதில் நினைத்தவள் அவன் அருகே செல்ல… அவன் கண்டுக் கொண்டதாகவே இல்லை….

“அரசு… அங்க என்னடா பண்ற??? இங்க வா….” வினு அவனை அழைக்க., அவளை விசித்திரமாக பார்த்தவன்…

“வர மாட்டேன் போடி.,… நீ ரொம்ப என்னை டார்ச்சர் பண்ணுவ” குழந்தை போல் சிணுங்கினான்…

ஜீசை முழுதாக காலி செய்ததின் பயன் அவனை முற்றிலும் போதையின் பிடியில் சிக்க வைத்திருந்தது…இயல்பிலே மென்மையானவன் என்பதால் ஐந்து வருடமாக கோபக்காரன் என அவன் போட்டிருக்கும் முகமூடி கழண்டு பழைய திருவாக உளறிக் கொண்டிருந்தான்….

அவன் சிணுங்கலில் வினுவிற்கு சிரிப்பு வர…மீண்டும் அழைத்தாள்… அதை கண்டுக் கொள்ளாதவன்… “சுமி சுமி நீ எங்க இருக்க??? அண்ணா உன்னை தேடி வந்துட்டே இருக்கேன்… இதோ ஸ்பீடா வரேன்” தங்கையை நினைத்து புலம்பியவன் வேகமாக மரத்தை சுற்ற…

வினுவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது… “அப்போ இவன் தங்கச்சிய பத்தி இவனுக்கும் தெரியாதா??? எப்படி கண்டுபிடிக்க போறோம்…” நினைக்கும் போதே மலைப்பாக இருக்க அதை ஒதுக்கிவிட்டு திருவை கவனித்தாள்.

எவ்வளவு அழைத்தும் அவன் நிறுத்தாமல் மரத்தை சுற்றிக் கொண்டிருக்க., வினு அவன் அருகே சென்று அவன் கையை பற்றி இழுத்தாள்…. அதில் அவன் ஒரு இன்ச் கூட அசையாமல் இருக்க வினு தான் அவன் எதிர்த்ததில் அவன் நெஞ்சில் வந்து மோதினாள்… தன் தலையை தடவிக் கொண்டவள்,

“டேய் அரசு… வா டா போகலாம்… யாரச்சும் உன்னை இப்படி பார்த்தா அவ்வளவு தான்… உன் மேல வச்சிருக்க மரியாதை போய்டும்…” கண்கள் யாரவது வருகிறார்களா என்று அனைத்து திசையிலும் அலைபாய திருவின் கண்களோ அத்தனை நெருக்கத்தில் தன் நெஞ்சின் அளவு இருந்தவளின் மேல் அலைபாய்ந்தது….

திருவிடம் எந்த சத்தமும் வரதாததால் நிமிர்ந்து பார்த்தவள் அவனின் மோனப் பார்வையில் விழிவிரித்துப் பார்த்தாள்…. ஏன் அப்படி பார்க்கிறான் என வினு யோசிக்க அவன் அவளை நோக்கி குனிந்தான்…. அதில் அவள் இதயம் பந்தயக்குதிரையைவிட வேகமாக அடித்துக் கொள்ள… அவன் கண்களில் இருந்து பார்வையை அகற்ற முடியாமல் பார்த்தாள்… அவள் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு சென்றவன்… யோசிப்பவன் போல் பாவனை காட்டிவிட்டு,

“நீ தானே அந்த ரெட்டவாலு குரங்கு… சரியான இம்சை…” என்றானே பார்க்கலாம்… வினுவிற்கு சப்பென்று ஆகிவிட்டது…

‘இதை சொல்றதுக்கு தான் இப்படி பக்கத்துல வந்தானா????? ஒரு நிமிஷத்துல பயம் காட்டிட்டான்..’ வேகமாக துடித்த இதயம் சற்று சமன் பட.., “ லூசு லூசு…. எவ்வளவு போதைல இருந்தாலும் என்னை மட்டும் திட்டுவான் ராஸ்கல்….” அந்த நிலையிலும் தன்னை கேலி செய்பவனை மனதில் கடிந்தவள் மீண்டும் அவனை அழைக்க,

“ம்ஹும் நான் வர மாட்டேன்… நான் என் தங்கச்சிக்கிட்ட போறேன்… எனக்காக அங்க யாரு இருக்காங்க??” என்று முறுக்கிக் கொண்டான்…

என்ன சொல்லி சமாளிப்பது எனப் புரியாமல், “அது அங்க ஹனி இருக்கா….” வினு அவனை சமாளிக்க முயல, திருவின் முகத்திலோ வேதனையின் சாயல்.

“என் பொண்ணு பாவம் அவளோட அம்மாவும் அப்பாவும் அவளை விட்டுட்டு போய்ட்டாங்க… ஆனா எனக்கு ரெண்டு பேருமே இந்த உலகத்த விட்டே போய்ட்டாங்க….” திரு வானத்தை காண்பித்து கூற… வினுவிற்குள் பெரும் பூகம்பம்… எப்படி சமாளிக்க போகிறோம்… இவன் இழந்தது அனைத்தையும் எப்படி திரும்ப அளிக்க போகிறோம் என்ற கேள்வி அவளை அச்சுறுத்தியது…

கண்கள் கலங்க.. அவன் கையை பற்றிக் கொண்டவள் “உனக்கு நான் இருக்கேன் டா… யாரு என்ன சொன்னாலும் நீ எனக்கு தான்..”. அவன் கையை மேலும் இறுக்கமாக பற்றிக் கொண்டவள் அவனை மெதுவாக இழுக்க அவனும் அவன் இழுப்பிற்கு வந்தான்…

“இப்படி தான் அவனும் சொன்னான் ஆனா என் குடும்பத்தையே இல்லாம பண்ணிட்டு போய்ட்டானே… என் தங்கச்சி வாழ்க்கை போச்சு என் அப்பா செத்தே போய்ட்டாங்க.. என்னைப் பத்தி யோசிக்காம ரெண்டு பேரும் ஏன் என்ன விட்டுட்டு போய்ட்டாங்க…” ஐந்து வருடங்களாக தனக்குள் அவன் கேட்டுக் கொள்ளும் கேள்வியை வினுவிடம் அவன் கேட்க… வினுவால் பதில் சொல்ல முடியவில்லை…

‘செத்துப் போன உன் அப்பாவ என்னால கொண்டு வர முடியாது டா ஆனா உன்ன விட்டு போனவங்களை எல்லாம் கண்டிப்பா உன்னை தேடி வர வைப்பேன்..’. தீர்க்கமாக மனதிற்குள் முடிவெடுத்தவள் அவனோடு இணைந்து நடந்தாள்…

அவள் கையை பற்றியவாறு அவன் தள்ளாடியடியே வர… வினு அவன் இடுப்பில் கைக்கொடுத்து அவனை நடக்க வைத்தாள்… அவள் தன் இடுப்பில் கை வைத்திருப்பதை பார்த்தவன்.. சட்டென்று அவள் இடுப்பில் கைக் கொடுத்துக் கொள்ள., வினு கூச்சத்திலும் அதிர்ச்சியிலும் நெளிந்தாள்…

“என்னடாப் பண்ற… கையை எடு…”

“நீ மட்டும் போட்டிருக்க????” தன் இடுப்பில் படர்ந்திருக்கும் அவளின் கையை சுட்டிகாட்டியவாறு கூறினான்.

“ஹம்ம்… நீ மட்டும் இப்போ சுயநினைவோட இருந்திருக்கணும் உன் பக்கத்துல கூட விட்டுருக்க மாட்ட…”. என்றவள் அவன் கையை விலக்காமலே நடந்தாள்.

“என்னால முடியலை…. நான் ரொம்ப தூரம் நடந்துட்டேன் இன்னும் எவ்வளவு தூரம் போகணும்…” அவளை விட்டுவிட்டு அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து அவன் கேட்க,

திரும்பி அவன் முதலில் நின்றுக் கொண்டிருந்த இடத்தை பார்த்தாள் வினு… இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள்… “நாலு ஸ்டெப் வைக்குறதுக்குள்ள ரொம்ப தூரம் நடந்துட்டியா???” என்று அவனை முறைக்க.. திரு சிரித்தான்…

அவன் சிரிப்பில் கன்னக்குழி தெரிய அதை ரசித்தவள் அவன் அருகில் அமர்ந்தாள்….

திரு வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்க, வினு அவன் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

எ”ப்போ எனக்கு ஓ.கே சொல்லுவ???” அங்கு நிலவிய அமைதியை கிழித்தவாறு வினு கேட்க… திரு திரும்பி பார்த்தான்.,

“எனக்கு எப்போவோ ஓ,கே தான்., ஆனா எனக்கு உன்னைப் பார்த்தா பயம்….” அவள் கண்களை பார்த்தவாறு அவன் கூற., அவன் கூறியதில் வினு அவனை முறைத்தாள்.

“உன்னை பார்த்தா தான் மொத்த ஆபிசும் பயப்படுது… நீ என்னைப் பார்த்து பயப்படுறியாக்கும்??,” வினு அவனை பார்த்து அலுத்துக் கொள்ள… அவள் கைகளை பற்றி அவன் கைகளுக்குள் பொதிந்துக் கொண்டவன்.,

“ம்ம்ம்… பயம் தான்… எங்க என்னையும் மீறி உன்கிட்ட சாஞ்சுடுவேனோன்னு பயம் தான். காதலை மட்டுமே காண்பிக்கிற இந்த கண்ணுக்குள்ள விழுந்திடுவேனோன்னு பயம் தான்.. என்னையே சுத்தி வர்ற இந்த ரெட்டவாலுகிட்ட மாட்டிக்குவேனோன்னு பயம் தான்…” அவள் விழிகளோடு தன் விழிகளை கலந்தவன் மென்மையாக கூற…. அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வினு இன்பமாக அதிர்ந்தாள்…

அவன் கூறியதில் சந்தோஷமாக உணர்ந்தவள் அடுத்த நொடி அவன் போதையில் உளறுகிறான் என்று புரியவும்., முகம் வாடி போனது..

அவள் விழிகளை பார்த்திருந்தவன் பின் தன் பார்வையை விலக்கிக் கொண்டு.,

“எனக்கு உன்மேல லவ் வந்தாலும் நீ எனக்கு வேண்டாம்… லவ் எல்லாம் ஏமாத்து வேலை… இந்தக் காதல் தான் என் தங்கச்சியை என்கிட்ட இருந்து பிரிச்சுது… என் அப்பாவை இந்த உலகத்தைவிட்டே அனுப்பி வச்சுது.. அதனால எனக்கு இந்த காதல் வேண்டாம்… நீ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ….”

முதற் பாதியில் அவன் கவலை புரிந்து வருந்தியவள் அவன் கடைசியாக கூறியதில் கோபம் வர., அவன் கன்னத்தை பற்றி தன் பக்கம் திருப்பினாள்,

“இங்க பாருடா உனக்கு என்னைப் பிடிக்காட்டி பிடிக்கலைன்னு சொல்லு. அதை விட்டுட்டு நான் யாரை கல்யாணம் பண்ணிக்ணும் பண்ணக்கூடாதுன்னு நீ சொல்லாத….” கோபமாக உரைத்தவள் பற்றியிருந்த கன்னத்தை விட்டுவிட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்…

கோபத்தோடு கூறினாலும் மனதில்., “இவன் பெரிய இவன்… வந்துட்டான் நான் யாரை கல்யாணம் பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு சொல்றதுக்கு…” திருவை தாளித்துக் கொண்டிருந்தவள் மீண்டும் அவனது தங்கச்சி பற்றிய புலம்பலில் பார்வையை அவன் பக்கம் பதித்தாள்…

“இந்த பஸ் எப்போ சுமிக்கிட்ட போகும்???” திரு வினுவிடம் கேட்க., ஏற்கனவே அவன் வேறு யாரையாவது கல்யாணம் செய்துக் கொள் என்று கூறியதில் கடுப்பில் இருந்தவள்.,

“ம்ம்…. போகும் போகும்… என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உடனே போகும்” என்றாள் எரிச்சலோடு.

அவளை ஆழ்ந்து நோக்கியவன்., “சரி அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவன், அவள் என்னவென்று அதிர்ந்து யோசிப்பதற்குள் அவன் கழுத்தில் கிடந்த செயினை கழட்டி அவள் கழுத்தில் போட்டிருந்தான்….

தன் முட்டைக் கண்களை விரித்துப் பார்த்தவள்… நடந்ததை நம்ப முடியாமல்… அந்தச் செயினை தன் கையில் எடுத்துப் பார்க்க… A.A என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த செயின் அவளை கவர்ந்தது… கண்களில் நீர் துளிர்க்க., அந்த செயினை பார்த்தவள் மறு நொடி காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்….

“இப்போ சுமிக்கிட்ட கூட்டிட்டு போறியா????” அவள் அளவிற்கு இறுக்கமாக கட்டிக் கொள்ளாவிட்டாலும் மெலிதாக அணைத்தவன் அவள் காதுக்குள் ரகசியம் பேச…. அவன் மார்பில் தலை வைத்திருந்தவள் சரி என்பது போல் தலையை அசைத்தாள்…. அவள் கூறியதில் மகிழ்ந்தவன் அவளை இறுக்கமாக அணைத்திருந்தான்….

திருவின் அணைப்பில் இருந்தவள் விக்கி தன்னை தேடி வரும் அரவம் கேட்டு சட்டென்று அவனை விட்டு விலக… கையில் வைத்திருந்த லாலிப்பாப்பை யாரோ பிடுங்கிய உணர்வில் வினுவை பார்த்தான் திரு… அவன் பார்வை புரிந்தாலும் விக்கி தங்களை தேடுவதால் திருவின் கைகளை மட்டும் பற்றிக் கொண்டவள் விக்கிக்கு குரல் கொடுத்தாள்.

வினுவின் குரல் கேட்டு அவள் அருகில் வந்தவன் அங்கு போதையில் உளறியவாறு அமர்ந்திருந்த திருவை பார்த்து விட்டு மீண்டும் தன் அக்காவிடமே திரும்பினான்…

“அவங்க ரெண்டு பேரையும் மிரட்டியிருக்கேன் வினு… ஏதோ கோபத்துல பண்ணியிருக்காங்க… நாளைக்கு மச்சானை பார்த்து மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கேன் இல்லாட்டி போலிஸ் ஸ்டேஷன்ல மீட் பண்ணலாம்னு சொன்னதும் அரண்டுட்டானுங்க….”

விக்கி கூறியதை கேட்டவள், “சரி டா… அவங்களை நாளைக்கு கவனிச்சிக்கலாம்.. இப்போ அரசுவை அவன் வீட்ல விட்டுட்டு நாம கிளம்புவோம்…” தன் கைகளை பற்றி இருந்தவனை கனிவுடன் பார்த்தவாறே வினு கூற… விக்கியும் சரி என்பது போல் திருவின் கைகளை பற்றி அவன் எழும்ப உதவி செய்தான்.

விக்கியை யார் என்பது போல் பார்த்த திரு, “யார் நீ?? எதுக்காக என்னை கூப்பிடுற??? நான் வர மாட்டேன்…” அவன் கைகளை தட்டிவிட்டு வினுவோடு ஒன்றியவனை பார்த்து விக்கி ஙே என்று விழிக்க… வினு அவன் தோள்களை தட்டினாள்…

“அவன் தான் நிதானத்துல இல்லைன்னு தெரியுதே டா அப்புறம் ஏன் இப்படி இடிச்ச புளி மாதிரி நிற்கிற??, வா கிளம்புவோம்…” திருவை அழைத்துக் கொண்டு வினு நடக்க.. விக்கியும் பின் தொடர்ந்தான்…

திருவின் காரை அடைந்தவர்கள்., திருவை பின் சீட்டில் அமர வைத்துவிட்டு முன்னால் அமர்ந்து வீட்டை நோக்கி பயணப்பட்டார்கள்…

பாதை முழுவதும் திரு புலம்பியவாறே வர… எப்போதும் அவனை கம்பீரமாக பார்த்தவர்களுக்கு அவனை அப்படி பார்க்க சகிக்கவில்லை… அவனது புலம்பலில் பாதி சுமியை பற்றியும்., மீதி அவளை ஏமாற்றியவனை பற்றியும் தான் இருந்தது..

ஒரு வழியாக திருவின் வீட்டை அடைந்தவர்கள்., அவனை கைத்தாங்கலாக அழைந்து வந்து சோபாவில் அமர வைத்தார்கள்… ஆனால் அவனோ இப்போது தான் தன் உளறலை அதிகப்படுத்தினான்..

“பொண்டாட்டி எனக்கு பசிக்குது…” வயிற்றை தடவியவாறே வினுவிடம் கேட்டவனின் பொண்டாட்டி என்ற வார்த்தையில் விக்கி அதிர்நது வினுவையும் திருவையும் பார்த்தான்….

விக்கியின் அதிர்ச்சிக்கு விளக்கம் அளிப்பதை விட வினுவிற்கு திருவின் பசியே முதன்மையாக தோன்ற. கிட்சனுக்கு சென்றாள். அங்கு ப்ரிட்ஜில் பால் இருக்க அதை எடுத்து கேஸை பற்ற வைத்து பாலை காய்ச்சினாள்…. அதற்குள் ஹாலில் விக்கியின் அலறல் சத்தம் கேட்க… ஓடிச் சென்று பார்த்தவள் அங்கு., திரு விக்கியை துரத்திக் கொண்டிருக்க, அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறியவாறே ஓடிக் கொண்டிருந்த விக்கியை பார்த்து சிரித்தாள்.

“டேய் விக்கி எதுக்காக டா அரசுவை ஓட வைக்கிற???” சிரித்தவாறே வினு கேட்க., விக்கி அவளை கோபமாக பார்த்தான்.

“ஏன் டி??? ஹிட்லர் என்னை தொரத்துரது உன் கண்ணுக்கு தெரியலை., நான் ஓட வைக்கிறேன்னு மனசாட்சியே இல்லாம சொல்றியே டி…” வினுவிடம் கத்தியவனை பிடித்த திரு நீ அவுட் என்று கத்த… வினு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“ஓடி பிடிச்சி விளையாடுறிங்களா???, சரி விளையாடுங்க” என்றவள் மீண்டும் உள்ளே சென்றுவிட., விக்கி தான் மீண்டும் திரு துரத்தவும் ஓட ஆரம்பித்தான்…

பாலை காய்ச்சியவள் அதை கப்பில் ஊற்றி எடுத்து வந்தாள். அதை திருவிடம் நீட்டியவள் குடிக்க சொல்ல., அவனோ அதை வாங்கி ஒரே மடக்கில் பருகிவிட்டு… மீண்டும் பசிக்கிறது என்றான்…

“இன்னும் பசிக்குதா??, ஆனா வீட்ல எதுவும் இல்லையே” வினு என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்க., அவளிடம் பதில் இல்லாது போகவும் திருவே., “பொண்டாட்டி உன் பெயர் என்ன??? என்றான்..

“அவளோட பெயர் கூடத் தெரியாம தான் பொண்டாட்டின்னு கூப்பிடுறிங்களா????” திருவின் இந்த புது அவதாரத்தை பார்த்து விக்கி திகைப்பூடனே கேட்க., திருவோ முதல் கேள்வியை விடுத்து.,

“பொண்டாட்டி நம்ம குழந்தைங்க எங்க ???” என்க..

“ம்க்கும் கல்யாணமே இன்னும் நடக்கலை அதுக்குள்ள குழந்தை எங்கன்னு கேட்குறாரே நம்ம ஹிட்லர்….” விக்கி மனதிற்குள் திருவை கிண்டலடிக்க., வினுவோ.,

“நம்ம பொண்ணு ஹரி அண்ணா வீட்டுல இருக்கிறா டா” என்றாள்….

ஹரி முதலிலையே ஹனி தன்னோடு இருப்பதை வினுவிற்கு தெரியப்படுத்தியிருக்க… அதை சொல்லி திருவை சமாளித்தாள்…

நெற்றியை சுருக்கி யோசித்தவன்… “நம்ம பொண்ணு எதுக்காக அங்க இருக்கணும்… உடனே வர சொல்லு…” என்றவன் வினு கூறிய காலையில் பார்க்கலாம் என்ற எந்த சமாதனத்திற்கும் உடன்படவில்லை. நேரம் செல்ல செல்ல திருவின் புலம்பல் அதிகரிக்க. வேறு வழியில்லாமல் விக்கி ஹரிக்கு அழைத்து நடந்ததை கூற., ஹரி உடனே வருவதாக கூறினான்….

அவன் வரும் வரை திருவிற்கு ஓட்ஸ் கஞ்சியை ரெடி செய்து அவனுக்கு புகட்ட முயன்றாள்… அதற்கும் அந்த போதையின் பிடியில் இருந்த குழந்தை மறுத்து அழிச்சாட்டியம் செய்ய… வினு அவனது அண்ணன் நிகிலின் குழந்தை ரோஹித்திற்கு சாப்பாடு ஊட்டுவது போல் கதைகள் கூறியும் பாட்டு பாடியும் கஞ்சியை திருவிற்கு ஊட்டினாள்…

அமைதியாக கேட்பவன் அடுத்த நொடி வேண்டாம் என மறுத்து திரும்பிக் கொள்ள., அவனை கொஞ்சி கெஞ்சி கஞ்சியை புகட்டுவதற்குள் வினு சோர்ந்து போனாள்… விக்கி அவர்கள் இருவரையும் வாயில் கை வைக்காத குறையாக பார்த்திருந்தான்…

அவனது எண்ணவோட்டம் முழுவதும்., பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வினு., திரு செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் பொறுத்து., அழகாக அவனை கையால்வதை ஒருவித ஆச்சரியத்தில் பார்த்திருந்தான்… அதே போல் விறைப்பாக இருக்கும் திரு… சிறுவன் போல் செய்யும் சேட்டையையும் பார்த்தவனுக்கு இந்த காதல் தான் ஒவ்வொருவரையும் எப்படி மாற்றி விடுகிறது என்று பெரு மூச்சு எழுந்தது…

விக்கி அவனது எண்ணங்களில் உளன்றிருக்க… திரு வினுவிடம் கஞ்சி வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தான்…. அதே சமயம் வெளியே கார் சத்தம் கேட்க… விக்கி சென்று கதவை திறந்தான்… ஹரி ஹனியை தூக்கிக் கொண்டு வர… ஹனி அவன் தோளில் தூங்கியிருந்தாள்….

“வாங்க அண்ணா… வந்த உங்க பிரெண்ட் பண்ற அட்டகாசத்தை எல்லாம் பாருங்க…” ஹரிக்கு வழி விட்டவன் திருவை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க.,

உவ்வே என்று கேட்ட சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்….

சாப்பிட்ட கஞ்சி அனைத்தையும் வினுவின் மேல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான் திரு… வினுவோ அருவெறுப்பு எதுவும் இன்றி அவன் முதுகை நீவி விட்டாள். மனமோ அவனுக்கு என்னானதோ என்ற பயத்தில் துடித்தது… கண்கள் கலங்க திருவின் நெஞ்சையும் முதுகையும் நீவி விட்டவளை பார்த்த ஹரிக்கு திருவின் மேல் ஆத்திரம் எழ., ஹனியை விக்கியின் கையில் கொடுத்தவன் திருவை நெருங்கினான்..

“டேய் திரு என்னடா இதெல்லாம்???” கோபத்தில் ஹரி கத்த.,

“அண்ணா ப்ளீஸ்… அவன் மேலே தப்பு இல்ல… அவனுக்கு தெரியாம ஜீஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்துட்டாங்க… அரசுவை திட்டாதிங்க….” ஹரி கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவானோ என்று வினு அவசரமாக அவனிடம் விளக்கினாள்…

“ஹம்ம்.. விக்கி நீ பாப்பாவை அவளோட ரூம்ல படுக்க வச்சிடு… அதோ அது தான் ஹனி ரூம்…. நீயும் போ வினு… அங்க வாஷ் ரூம் இருக்கு… நான் இவனை குளிக்க வச்சிடுறேன்..”.. ஹரி திருவை அழைத்துக் கொண்டு திருவினது அறைக்கு செல்ல… விக்கியும் வினுவும் ஹனியின் அறைக்கு சென்றனர்..

ஹனியை அவளது பெட்டில் தூங்க செய்துவிட்டு விக்கி ஹரிக்கு உதவ சென்று விட., வினு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள்… அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனில் திரு வாந்தி செய்ததால் அதை கழட்டாவிட்டால் அவளுக்கும் வாந்தி வரும் போல் இருந்தது… வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தவள் ஹனியின் கப்போர்டில் எதாவது மாற்றுடை கிடைக்கிறதா என்று தேடினாள்…

அவளை ஏமாற்றாமல் ஹனியின் துணிகளின் அடியில் ஒரு கவரில் இருந்தது அந்த மஞ்சள் நிற சுடிதார்… அதை எடுத்துக் கொண்டவள் யாருடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் இப்போதைக்கு தனக்கு அது தேவை என்பதால் அதை எடுத்துக் கொண்டாள்…

தன்னை சுத்தப்படுத்திவிட்டு அந்த சுடிதாரை அணிந்தவள் கண்ணாடியில் தன்னை பார்க்க.. அந்த சுடி அவளுக்கு சற்று தொள தொளவென்று இருந்தது ஆனாலும் அழகாக இருந்தது…. ஹனியை ஒருமுறை திரும்பி பார்த்தவள் அவள் அருகே சென்று நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திருவை தேடிச் சென்றாள்…

அங்கு திருவை குளிக்க வைக்கிறேன் பேர்வழி என்று ஹரி பாதி நனைந்திருக்க… விக்கி முழுதாக குளித்திருந்தான்… ஒரு வழியாக திருவை சமாளித்து அவனது பைஜாமாவை அணிவித்து கட்டிலில் படுக்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள் ஹரியும் விக்கியும்… அவர்களின் கோலத்தை கண்டு வினு சிரிக்க.,

“அண்ணா… நான் பார்த்துக்கிறேன் நீங்க தலையை துடைச்சிக்கோங்க… டேய் விக்கி… நீ திருவோட டிரெஸ் எதாச்சும் இருந்தா போட்டுக்கோ… ஈரத்தோட இருந்தா உனக்கு சளி பிடிச்சிக்கும்…” கரிசனையாக கூறியவள் தன் சுடியை பார்த்து தயங்கி., “அண்ணா இது… ஹனியோட கப்போர்ட்ல இருந்துச்சு… அவளோட பர்மிஷன் கேட்காம எடுத்துட்டேன்….” என்றாள்.

“பரவாயில்லை மா… உன் டிரெஸ்சை முழுசும் வாந்தி பண்ணியே நாசம் பண்ணிட்டான்… காலையில் இருக்கு இவனுக்கு…” திருவை முறைத்தவன் வெளியே செல்ல… விக்கியும் திருவின் டீ ஷர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினான்…

மூவர் பேசுவதையும் கேட்டவன் எங்கே வினு தன்னைவிட்டுச் சென்று விடுவாளோ என பயந்து வினுவின் கையை எட்டிப் பிடித்தான்..

“என்னை விட்டுட்டுப் போய்டாத…”

கட்டிலில் படுத்திருந்தவனின் அருகில் அமர்ந்தவள் அவன் தலையை கோதினாள், “உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன். நீ சமத்தா இப்போ தூங்குவியாம்…” அவன் தலையை வருடியவாறே வினு கூற, அவளது மற்றோரு கையை தன் கன்னத்தின் அடியில் வைத்து தூங்க ஆரம்பித்தான்….

இடையிடையே லேசான முனகலும், புலம்பலுமாக அவள் கைப்பிடித்து திரு தூங்க… வினு அவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

உடை மாற்றிய விக்கியும் ஹரியும் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் ஓய்வெடுக்க, வினு மட்டும் விடிய விடிய திருவின் தலையை கோதியவாறே அமர்ந்திருந்தாள்.

திருவிற்கு அதிகாலையிலே முழிப்பு வந்துவிட கண்களை திறக்க முயன்றான்.. கண்கள் இரண்டும் தீயாய் எரிய., தலை பாரமாக கணத்தது. தலையை அழுத்தமாக அவன் தலையணையில் புதைத்துக் கொள்ள முயல, பஞ்சுப் பொதியில் தலை வைத்திருப்பது போன்று இருந்த சுகத்தில் தன் கன்னங்களை அதில் வைத்து தேய்த்தவன்… தலையனையை கட்டிப்பிடித்துக்கொள்ள. அது மேலும் சுகமாக இருந்தது..

என்றும் இல்லாமல் இன்று ஏன் இந்த சுகம் என்று மூளை சிந்தித்தது… மெலிதாக கண்களை மலர்த்தி பார்த்தவனின் கண்களுக்கு கட்டிலில் சாய்ந்தவாறே தூங்கி இருந்த வினுவின் முகம் தெரிய, ஒரு நிமிடம் கனவோ என்று தான் நினைத்தான். கண்களை கசக்கிக் கொண்டு அவன் மீண்டும் பார்க்க… வினுவின் முகம் தான் தெரிந்தது… சட்டென்று கண்களை நன்றாக திறந்து பார்த்தவன் அவள் மடியில் தான் படுத்துக் கொண்டு அவள் இடையை வளைத்து பிடித்திருப்பதை உணர்ந்து பதறியடித்து எழுந்தான்…

இரவு வெகு நேரம் திருவை பற்றி யோசித்தவள் அதிகாலையில் தான் தன்னையும் மீறி தூங்க ஆரம்பித்திருந்தாள்.. கட்டிலில் அமர்ந்தவாறே அவள் தூங்கியிருக்க கை மட்டும் திருவின் கேசத்தை கோதியவாறே இருந்தது.

திரு எழும்பியது கூட உணராமல் வினு தூங்கிக் கொண்டிருக்க, திருவிற்கு தனது பெட்ரூமில் அதுவும் தனது பெட்டில் துயில் கொண்டிருப்பவளை கண்டு கோபம் பெருகியது… கட்டிலை விட்டு இறங்கியவன்,

“வினூனூனூனூ…….” என்று கர்ஜிக்க…. அவனது காட்டுக் கத்தலில் வினு அடித்துப்பிடித்துக் கொண்டு எழும்பினாள்..

தன் முன்னே உக்கிரமாக முறைத்துக் கொண்டு நிற்ப்பவனை புரியாமல் பார்த்தவள், “என்ன அரசு??? தலை வலிக்குதா?? நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரட்டுமா??” கோவைப்பழம் போல் சிவந்திருந்த கண்களை பார்த்தவள் தலைவலி போலும் என்று அவளாகவே நினைத்துக் கொண்டு கேட்க,

அது மேலும் திருவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்த தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான். அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

கண்களை சுற்றி பூச்சி பறப்பது போல் இருக்க, என்ன நடந்தது என யோசித்தவள் கன்னம் எரிவதில் தான் அவன் தன்னை அடித்திருக்கிறான் என்றே உணர்ந்தாள். இதுவரை யாரிடமும் அடி வாங்கியிராதவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாக அவனை பார்க்க… அவர்களின் இடையில் ஓடி வந்து நின்றான் விக்கி..

அதிகாலையிலே ஹரிக்கு அவனது மனைவி மது போன் செய்து உடனே வீட்டிற்கு அழைத்திருக்க.. அவன் விக்கியிடம் கூறிவிட்டு அவசரமாக சென்றிருந்தான். திரு கத்தியதில் பாதி தூக்கத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு விக்கி எழும்பி ஓடி வர., அதற்குள் திரு வினுவை அடித்திருந்தான்.

அதில் விக்கியின் உள்ளம் கொதிக்க., வேகமாக வினுவின் அருகே வந்தவன் திருவை திட்ட வாயெடுக்க, வினு அவனது கைகளை பற்றிக் கொண்டாள். அதை உணராத திருவோ,

“அறிவில்லையா உனக்கு ??? இப்படி தான் இன்னொருத்தங்க வீட்டுல வந்து இருப்பிங்களா?? அதுவும் என் பெட்ரூம்… சீ…. சீ… இந்த அளவுக்கு இறங்குவிங்கன்னு நான் எதிர்ப்பார்க்கலை… காதல் கத்தரிக்காய்ன்னு சுத்திட்டு இருக்கிறன்னு பார்த்தா., இந்த வேலையும் பார்க்கிறியா???” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தேளாக திரு கொட்ட.. வினு துடிதுடித்துப் போனாள்.

அவனது வார்த்தைகள் விஷமாக தாக்கினாலும் வினுவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. மரத்து போனது போன்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்திருந்தாள்.. விக்கி தான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல் அவளது கைகளை உதறியவன்… ஒற்றை விரலை திருவின் முன்பு நீட்டி.,

“இங்க பாருங்க மிஸ்டர் திருநாவுக்கரசு… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. நேத்து என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதிங்க…” எப்போதும் தனிந்து செல்பவன் வினுவை அடித்ததில் கோபம் கொப்பளிக்க நிமிர்வாக நின்று திருவை அதட்ட..

திருவின் கோபம் எல்லையை கடந்தது.. தன் வீட்டிற்குள் நின்றுக் கொண்டு தன்னையே திட்டுபவனை முறைத்தவன், நீண்டிருந்த விக்கியின் கைகளை பற்றினான்.. அதில் பதறிய வினு.,

“வேண்டாம் அரசு.. அவனை விடு.. விக்கி நீ சும்மா இருடா.. அவனுக்கு என்ன நடந்துச்சுன்னு நியாபகம் இல்லை டா… நீயாச்சும் அமைதியா இரேன்..” திருவை விடுத்து தன் தம்பியிடம் வினு கெஞ்ச..

அனைத்திற்கும் காரணம் இவள் தான் என்று கோபம் உடைப்பெடுக்க விக்கியின் கைகளை விட்டவன்., வினுவின் கைகளை பற்றி அவளை தரதரவென்று இழுத்துச் சென்றான்…

“அரசு.. விடு.. எனக்கு வலிக்குது…” அவன் அழுத்திப் பிடித்திருப்பதில் அவள் கை வலியெடுக்க., வலி தாளாமல் கத்தியவளை சற்றும் சட்டை செய்யாதவன் வாசலின் வெளியே அவளை தள்ளினான்..

அவன் தள்ளியதில் கீழே விழப்போனவள் தன்னை சமாளித்துக் கொண்டு நிற்க… விக்கி அவளை தாங்கிக் கொண்டான்.. கண்கள் கலங்க திருவை ஏறிட்டவளை பார்த்தவனின் கண்களுக்கு அவளின் கலங்கிய கண்களை விட அவள் அணிந்திருந்த சுடி தெரிய.. அவன் சீற்றம் கூடியது..

“ஏய்..!!!! இந்த சுடியை எதுக்கு நீ போட்டிருக்க??? யாரை கேட்டு எடுத்த??? அதை கொடு…” அந்த சுடியில் அவளை பார்த்தவனின் மனம் எரிமலையாக வெடிக்க… மனம் எங்கும் கோபம்.. கோபம் … கோபம் மட்டுமே…

கோபம் கண்களை மறைக்க வினுவை நோக்கி ஒரு அடி முன் வைத்தவன் அவளது சுடியை பறிக்க முயன்றான். அவன் என்ன செய்ய போகிறான் என்று யூகித்த விக்கி சுதாரித்து வினுவை தன் பின்னே மறைத்துக் கொள்ள, தன் முயற்சி தடைப்பட்டதில் திரு விக்கியின் டீ ஷர்ட்டை பற்றியிருந்தான்.

“நேத்து போதையில இருந்தப்போ கூட., நிதானத்துல இருந்திங்க மிஸ்டர் திரு ஆனா இப்போ தெளிஞ்ச அப்புறம் தான் மிருகமாயிட்டிங்க…” அவன் கண்களை பார்த்து கூறிய விக்கி., திருவின் கைகளை உதறிவிட்டு வினுவை அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தான். வினு திரும்பிப் பார்த்தவாறும் விக்கியை சமாதனம் செய்ய முடியாமலும் செல்ல… திருவிற்கு கோபம் குறைந்தபாடில்லை…

தலைவேறு விண்விண்ணென்று வலிக்க… ஹால் சோபாவில் தலையை பிடித்தவாறு சென்று அமர்ந்தான். அந்த சுடி எப்படி அவளின் கைகளுக்கு கிடைத்தது என்று புரியாமல் யோசித்தவன் அவர்கள் ஏன் இங்கே வந்தார்கள் என்று யோசிக்க தவறினான். கோபத்தின் உச்சத்தில் இருந்தவனுக்கு தான் பேசியதின் வீரியம் விளங்கவில்லை…

கையில் தலையை தாங்கியவாறு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்று தெரியாது, ஹரி வந்து தன்னை உலுக்கும் வரை அப்படியே இருந்தவன் ஹரியின் சத்தத்தில் நிமிர்ந்துப் பார்த்தான்…

“டேய் திரு.. எதுக்காக இப்படி உட்கார்ந்திருக்க??? காஃப்பி போட்டு தரட்டுமா???” திருவின் அருகில் அமர்ந்தவன் கண்களால் விக்கியையும் வினுவையும் தேட,

“வேண்டாம் டா… தலை ரொம்ப வலிக்குது. ஸ்ட்ராங்கா டீ குடிச்சா தான் சரியாகும்…” கோபம் சிறிது குறைந்திருக்க, தலைவலியில் நெற்றியை தேய்த்தவாறே கூறினான்.

“சரிடா நான் போட்டுத் தரேன்.. அது சரி, இந்த விக்கியும் வினுவும் எங்க??? அவங்க கேட்டிருந்தா கூட போட்டுத் தந்திருப்பாங்களே???” அவர்களை காணாததால் ஹரி கேட்க., திருவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“அவங்களை பற்றி பேசாதே டா…லூசுங்க.. அவங்க என்னப் பண்ணினாங்க தெரியுமா???” என்றவன் ஹரி எப்படி சரியாக வினுவையும் விக்கியையும் பற்றி கேட்கிறான் என்பதை கவனிக்க மறந்து., காலையில் அவன் கண் விழித்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூற, ஹரி இப்போது தலையில கை வைத்து அமர்ந்துவிட்டான்.

“என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க???” ஒரு பக்கம் திருவின் மேல் கோபம் எழுந்தாலும் அவனும் நேற்று நிதானத்தில் இல்லை என்பதால் அவனால் திருவிடம் தன் கோபத்தை காண்பிக்க முடியவில்லை….

ஹரியின் கேள்வியில் புருவம் ஏற்றி திரு பார்க்க., ஹரி அவனை திட்டித் தீர்த்தான்.

“ஏன் டா இப்படி இருக்க??? அந்த பொண்ணு உனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிச்சு தெரியுமா???” என்றவன் நேற்று இரவு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க… திருவிற்குள் அப்படி ஒரு குற்றவுணர்வு… வினுவின் மேல் இருந்த கோபம் பறந்தோட அந்த இடத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு வந்து அமர்ந்துக் கொண்டது..

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here