வணக்கம் மக்களே!!! காதலை தேடி ஐந்தாம் அத்தியாயம் பதிந்து விட்டேன். எப்படி இருக்குனு படிச்சுட்டு கருத்துக்களை சொல்லுங்க…
காதலை தேடி… – 5
மாலை மூன்று மணிக்கு அருள் லேபிற்கு செல்ல அவனை பார்த்த மதுராவின் விழிகள் அவனை விட்டு விலக மறுத்தது. தன் காதல் நிறைவேறுமா? என்றெல்லாம் யோசிக்க அவள் தயாராக இல்லை. யோசிக்கவில்லை என்பதைவிட அவளுக்கு காதலை அருளிடம் சொல்ல தைரியமில்லை.
இங்கே இருக்கும் வரை மட்டும் தான் அவனை பார்க்க முடியும். ஆதலால் இந்த நிமிடங்களை அவள் சேமிக்க தொடங்கினாள்.
தன் காதலை தன்னுள்ளே வைத்து கொண்டாள். அவனின் ஒவ்வொரு அசைவும் தன் மனதினுள் சேமித்து கொண்டாள்.
ஒரு சில நாள் அருள் வந்துருக்கிறானா இல்லையா என அவனின் வண்டியை வைத்து தான் தெரிந்து கொள்ளுவாள். அருளை போல் அவனின் ரசிகையானாள்.
தன்னை யாரென்ற தெரியாதவனை தன் மனத்திற்குள் இவள் நேசித்து கொண்டிருக்க, தன்னை ஒரு பெண் காதலிப்பது தெரியாமல் அருள் தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.
ஆறு மாதம் நொடிகளாய் சென்றுவிட, அந்த வார இறுதியுடன் இவர்களின் புரொஜெக்ட் முடியப்போகிறது. இதற்கு மேல் அருளை பார்க்க முடியாதென்பதே மதுராவிற்கு வலியை கொடுத்தது. வலியுடன் தன் காதலையும் மறைத்து கொண்டு நடமாடி கொண்டிருந்தாள்.
கல்லூரியில் புராஜெக்ட் சமர்ப்பித்துவிட்டு அடுத்த வாரத்தில் கல்லூரியில் நடக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டுருந்தனர்.
இதுவரை மாணவர்களாய் சுற்றி திரிந்தவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டமான கல்லூரியில் நடக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு சற்று பயத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.
நேர்காணலில் பங்கேற்ற மதுரா, காவ்யா, கிருஷ்ணாவிற்கு ஒரே அலுவலகத்தில் வேலை கிடைத்ததில் தோழிகளை கையில் பிடிக்க முடியவில்லை.
இதோ அவர்கள் வேளையில் சேர்ந்து இரண்டாண்டு முடிய போகிறது. இந்த இரண்டாண்டுகளில் அருளின் நினைப்பை அவளால் தடுக்க முடியவில்லை.
கடந்த ஆறு மாதமாக மதுராவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்க, இரண்டு வருடங்களாகியும் அருளை மறக்க முடியாமல் தவித்து கொண்டுருந்தவள் தன் காதலை அருளிடம் சொல்லிவிட முடிவு செய்தாள். ஆனால் அருளை தொடர்பு கொள்ள இருக்கும் ஒரே வழி முகநூல் மட்டும் தான்.
கடந்த காலத்தின் நினைவில் மூழ்கியிருந்தவள் மணியை பார்க்க அதிகாலை மூன்றை நெருங்கி கொண்டிருந்தது . நாளை காலையில் ஒரு மீட்டிங் இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டுமென கண்களை மூடி தூங்க முயன்றாள்.
இரவு வெகு நேரம் முழித்திருந்ததால் காலையில் தாமதமாக எழுந்தவள், வேகமாக அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
அந்த மாதம் முடிய ஒரு வாரமே இருக்க வேலை அதிகமாக இருந்தது. கூடவே அருளின் பதிலும் அவளை சோர்வடைய செய்ய தலைவலி வேறு பாடாய்படுத்தியது.
சிறிது நேரம் தன் இடத்தில் தலை கவிழ்ந்து படுத்திருந்தவளை பார்த்த காவ்யா, என்ன மது என்னாச்சு? ஏன் சோர்வா தெரியுற உடம்பு சரியில்லையா? என அவளின் தலையை தொட்டு பார்க்க, அவளின் அன்பிலா இல்லை அவளிடம் மறைக்கின்றோம் என்ற குற்றவுணர்விலா என ஏதோவொன்று மதுராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஒண்ணுமில்ல தலை வலிக்குது என கூறியவளை நம்பாமல் பார்த்து கொண்டிருந்த காவ்யா, சரி ஒரு பத்து நிமிஷம். எனக்கும் வேலை முடிஞ்சுடுச்சு கிளம்பிடலாம்.
மதுராவை இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்ற காவ்யா, ஒரு வாரத்திற்கு பிறகு வினோத்தை பார்த்தாள். இவளை பார்த்தவுடன் அவன் உள்ளே சென்று விட, அதை பார்த்து கொண்டிருந்த வினோத்தின் தம்பி சுகுமார் “என்னக்கா என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்கும்? உன்ன பார்த்ததும் அண்ணா உள்ள போய்ட்டான்”.
அன்று நடந்ததை சுகுவிடம் கூறினாள். நானும் அவனுக்கு எத்தனையோ தடவ சாரினு மெசேஜ் பண்ணேன் டா. போனும் பண்ணி பார்த்துட்டேன். ஆனா அவன் எடுக்கவே மாற்றான்.
சரி விடுக்கா பேசாம எத்தனை நாள் இருந்திடுவான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த காவ்யாவின் தம்பி பாலா, “டேய் சுகு, நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு மறந்துடாத”.
சரிடா நாளைக்கு சாயங்காலம் தானே வந்துடுறேன். சுகுமார், பாலா இருவரும் பொறியியல் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருக்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் இந்த நால்வரும் சேர்ந்தால் அங்கே கேலியும், கிண்டலுமாய் ஒரே கொண்டாட்டம் தான்.
காவ்யாவும், வினோத்தும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டாலும் அவர்களால் ஒரு இரண்டு மணிநேரத்திற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் ஒருவாரமாய் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.
காவ்யாவும் வினோத்திடம் எவ்வளவோ முறை மன்னிப்பை கேட்டும் அவன் பேச மறுக்க காவ்யாவிற்கு அவனின் இந்த செயல் தவிப்பாய் இருந்தது.
தேடல் தொடரும்….