என் கோடையில் மழையானவள்-4

0
327

நீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.

அவளது நீண்ட சுருள் அளக்கக் கூந்தலை அப்படியே காற்றில் அசைந்தாடியபடியே இருக்க இளம்பச்சை நிற சில்க் புடவையில் தந்தச் சிற்பமாய் நின்றிருந்தவளின் பின்னால் வந்து நின்ற குரு “வெண்பா” என்று கிசுகிசுத்த குரலில் அழைத்தான்.

மறுகணம் திரும்பி மலர்கொடியாய் இவனது மார்பில் சாய்ந்து விட்டாள். இதற்காகவே தவம் கிடந்தவனை போல வேகமாய் அவளை இறுகத் தழுவியவன், சிறிது நேரத்தில் தன்னிலிருந்தும் விளக்கி அவள் விழிகளை நேருக்கு நேராக நோக்கி,

“ஐ லவ் யூ வெண்பா” என முதல் தடவையாக தன காதலை வெளிப்படுத்துகிறான் குருப்ரகாஷ்.

அவன் பார்வை வீச்சை இதற்கு மேலும் தாங்க மாட்டாமல் நாணித் தலை குனிய அவளது கன்னங்கள் அந்தி வண்ணமாய் வெட்கத்தால் சிவந்து போகின்றன. ஆசையுடன் தனது தளிர் கரங்களை அவனது கழுத்தில் மாலையாக்கி மார்பில் முகம் புதைத்தாள் அவனவள்.

அந்நேரம் சுகீர்த்தனது ஃபோன் அலாரம் அடிக்க சட்டென்று கனவு கலைந்து விழித்தெழுந்தான் குரு. அதிகாலை ஐந்து மணி.

நடந்ததெல்லாம் கனவா? நிஜமில்லையா? மனதில் ஏக்கம் பிறந்தது. “என்ன இது வைராக்கியமாய் மனதில் எடுத்துக் கொண்டு தானே தூங்கினேன். பின்பு எப்படி இப்படி ஒரு கனவு வந்தது? என்னதான் உறுதி பூண்டாலும் உள்ளத்தின் அடித்தளத்தில் இருப்பதால் தான் கனவாய் பரிணமித்து விட்டதோ? அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. இந்தக் கனவு பலித்தால்…? உள்மனம் தவித்ததும் குருவுக்கோ திக்கென்றிருந்தது.

இது வெறும் கனவு தான். இதை நினைத்து மனதை குழப்பிக் கொள்ளக் கூடாது.. என்ன அவள் தினமும் செய்யும் காதல் தொல்லைகளை இந்த மூன்று மாதத்திற்கு பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் படிப்பு முடிந்து விடும் அதன் பிறகு நான் என் வேலையை பார்த்துக் கொண்டு போய் விடுவேன். அதன் பிறகு அவள் எங்கே என்னை காண்பது? சில நாட்களில் என்னை மறந்து விடுவாள். இது அவளுக்கு ஏற்பட்டிருக்கும் வெறும் இனக்கவர்ச்சி தான்.. எனக் கூறி தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டவன் அங்கே புரண்டு படுத்துக் கொண்டிருந்த சுகீர்த்தனையும் அடித்து எழுப்பி விட்டு அன்றைய நாளை துவங்கினான்.

தன் வண்டியை பார்க் செய்து விட்டு நண்பனோபு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்தான் குரு. தினமும் அவன் வருவதற்கு முன்பாகவே வந்து நின்று அவனை கடுப்பேற்றும் வெண்பாவை இன்று காணவில்லை. தாமாகவே அவன் விழிள் சுழன்று அவளை தேட அதை சரியாக கண்டு கொண்ட சுகீ, “யாரை மச்சான் தேடுற?” எனக் கேட்க, நண்பன் தான் தேடுவதை கண்டுகொண்டானே என்பது ஒருபுறமிருக்க என்ன பதில் சொல்வது என புரியாமல் தடுமாறினான். அவனது தடுமாற்றை புரிந்து கொண்டவன் தனக்குள் சிரித்த வண்ணம்,

“என்னடா.. இன்னைக்கு அந்த மேகி மண்டைய காணோம்? தினமும் நமக்கு முன்னாடியே வந்து உன்னை ஒரு வழி பண்ணிடுவா.. ஒரு நாள் கூட காலேஜ் கட் பண்ண மாட்டாளே… ஹூம் பஸ் மிஸ் பண்ணிட்டாளோ என்னவோ…” என பலத்த யோசனையுடன் தன் நாடியை அழித்த வண்ணம் சுற்றும் ஆராய்ந்து கொண்டே நடந்தான் சுகீர்த்தன்.

அவனுள்ளும் அதே கேள்விதான் இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல் தன் நண்பன் தோளில் கையிட்டவாறு நடந்து கொண்டே,
“ஹப்பாடா.. இன்னைக்கு ஒரு நாளாவதுஅந்த பிசாசுகிட்ட இருந்து தப்பிச்சேனே இல்லைனா காலையிலேயே வந்து லவ் டோக்ஸ் விட்டு என்னை கடுப்பேத்திக்கிட்டு இருப்பா..” எனக் கூறிக் கொண்டிருந்தவனது தோளை அழுந்தப்பற்றி, “குருஊஊ..” என அழைக்க, “ என்னடா..?” என்றவாறு அவன் பக்கம் திரும்பினான்.

அவன் தோள் மேலிருந்த தன் கையின் அழுத்தத்தை மேலும் அதிகரித்தவாறே அவனை அந்தப் பக்கம் பார்க்குமாறு குருவின் பக்கம் திரும்பாமலே கூற பார்த்தவனுக்கு அவன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ச்சி ஒருபுறமிருக்க கோபமும் அவனை சூழ்ந்து கொண்டது.

அந்த பெரிய மரத்தின் நிழலில் மரபெஞ்சொன்றில் வெண்பாவும் குருவின் வகுப்பைச் சேர்ந்த சிவாவும் ஏதோ சிரித்துப் பேசிய வண்ணம் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு கைமுஷ்டி இறுகி இதயம் தாறுமாறாக துடிக்க, உஷ்னப்பார்வையுடன் நின்றிருந்தான் குரு.

குருவின் முகமாற்றத்தை வைத்தே குருவின் மனநிலையை கணித்தவன், “அந்த மேகி மண்டை சிவா கூட என்னடா செய்யுறா? பாரு அவளும் இருக்குற பல்லு பூரா வெளியில தெரியுற மாதிரி கெக்கபெக்கேனு சிரிச்சிட்டு இருக்கா.. அவளை கூப்பிட்டு மண்டைல ரெண்டு கொட்டினா தான் அவளுக்கு புரியும்..” என்றவன் குருவின் பக்கம் திரும்பிப் பார்க்க அவனோ இருவரையும் வெறித்து பார்த்த வண்ணம் அப்படியே நின்றான்.

இதற்கு மேல் சும்மா இருந்தால் ஆபத்து என்றெண்ணியவன்,
“ஹேய் மேகி.. மேகி மண்டை ..” எனக் சத்தமிட, அப்போது தான் குருவும் சுகீர்த்தனும் அங்கு நிற்பதை கண்டு முகம் பூவாய் மலர,

“என்ன சுக்குண்ணா..?” என கூச்சலிட்டுக் கேட்ட வண்ணமே சிவாவின் பக்கம் திரும்பி, “நாம அப்புறம் மீட் பண்ணலாம்.” என்றவள் அவனது பதிலையும் எதிர்பாராது ஓட சிவாவுக்கோ குருவை கண்டதும் தன்னை மதிக்காமல் ஓடுபவளை பார்க்க உள்ளே பற்றிக் கொண்டு வந்தது.

வேகவேகமாக ஓடி வந்தவள் சுகீர்த்தனை நோக்கி, “என்ன அண்ணா என்னை தேடி இங்கேயே வந்துட்டீங்களா?”என்று கூறிக் கொண்டே ஓரக் கண்ணால் குருவை பார்க்க அவனோ இறுகிய முகத்துடன் எங்கேயோ பாரத்துக் கொண்டிருந்தான். அவனது இந்த முகபாவனை அவளுக்கு புதிதாய் தோன்றியது.

“என்னம்மா அவன் கூட எல்லாமு உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க?” என்று கோபமாக வினவ,

“அதுவா அண்ணா… இன்னும் கொஞ்ச நாள்ல உங்க ஃபேர்வெல் வருதில்லையா.. அதை பத்தி ஏதோ டிஸ்கஸ் பண்ணும்னு சிவாண்ணா கூப்பிட்டாறு.. என்றவள் நிறுத்தி, “நோ நோ… சிவா கூப்பிட்டான்..” என்று கூறிக் கொண்டே போக ஒரு கணம் குருவின் பார்வை அவள் முகத்தில் கூர்மையாய் படிந்து விலகியது.

இது நாள் வரை தன்னை மட்டுமே ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவள் இன்று அந்த சிவாவை அவ்வாறு அழைத்ததில் அவனது கோபம் இருமடங்கானது. சிவாவை முதலில் அண்ணா என்று கூறி விட்டு மீண்டும் திருத்தி ஒருமைக்கு தாவிய வெண்பாவின் பொல்லாத கோபம் வரவே, வெகு சிரமத்துடன் அவள் முன் நின்று கொண்டிருந்தான்.

“என்னாது… சிவாவா? குருவைத் தவிர மத்த எல்லாரையும் அண்ணானு தானே சொல்லுவ? அவனும் உனக்கு சீனியர் தானே?..” என இடுப்பில் கை வைத்த வண்ணம் அவளிடம் கேட்க,

“நான் சிவாண்ணா தான் சொன்னேன்.. அவன் தான் இனி என்னை அப்படி கூப்பிட கூடாது.. குருவை மட்டும் தான் பேர் சொல்லி அழைப்பியா? இப்போ நாம ஃபிரண்ட்ஸ் சோ என்னையும் பேர் சொல்லியே கூப்பிடுனு சொல்லிட்டான். அதான் அப்படி.. ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சதும் வெயிட் பண்ண சொன்னான் இன்னும் அதை பத்தி டிஸ்கஸ் பண்ண இருக்குனு” என அவள் விளக்கமளிக்க குருவுக்கு சுகீர்த்தனுக்கும் புரிந்து விட்டது இது ஏதோ சிவாவின் குள்ள நரித் திட்டம் என்று.

“அதுக்காக யேன்மா அவன் கூட..” என்று சுகீ பேச்சை தொடரவே,

அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவனாய், சுகீர்த்தனை நோக்கி,
“அதான் உங்க தொங்கச்சி சொல்றாங்கள்ல. அவங்களுக்கு இப்போ சிவா அண்ணா இல்லையாமே.. அந்தப் ப்பொறுக்கி சிவா தான் இவங்க ஃபிரெண்ட் இவங்க கூட டிஸ்கஸ் பண்ணனும்னு சொல்லிருக்கான்ல.. நீ விடு சுகீ அவங்களுக்கு லேட்டாகும் அந்த ஸ்ஸிவாவையே போய் பாரத்துக்கட்டும் நமக்கென்ன..” என்றவன் அவளை ஓர் பார்வை பார்த்து விட்டு அதற்கு மேலும் நிற்காமல் அவ்விடம் விட்டு வேக எட்டுக்களுடன் நடந்தவன் வழியில் ஓரமாக கிடந்த குப்பைத் தொட்டியை பலங்கொண்ட வரை உதைந்து விட்டு போனான்.

குருவின் செய்கையில் சுகீர்த்தன் மௌனமாக சிரிக்க, ஏதேதோ பேசி விட்டு வேகமாக செல்லும் அவனையே வித்தியாசமாக நோக்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.

“அண்ணா குருவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி சொல்லிட்டு போறாரு? எனக்கு எதுவுமே புரியைலையேண்ணா..”என தன் தலையை சொறிந்த வண்ணம் சுகீயை பார்க்க,
“ஆமா இதெல்லாம் உனக்கு எங்கே புரிய போகுது..?” என்று மனதால் எண்ணிக்கொண்டே அவள் பக்கம் திரும்பி,

“உனக்கு தான் தெரியும்ல.. சிவாக்கும் குருவுக்கும் ஆகாதுன்னு.. நீ அவன் கூடயே பேசிக்கிட்டு வந்து இருக்க.. அதான் கோவம் அவனுக்கு.. யேன்மா நீ அந்த பொறுக்கி கூட பேசுற?” எனப் நிதானமாய் கேட்டான்.

“அதான் சொன்னேனே அண்ணா.. அப்போ அவன் கூட பேசினதால தான் குரு என் மேல கோவமா போறானா?” என பரிதாபமாய் வினவ, அவளது முகபாவனையில் அவனுக்கு பக்கென்று சிரிப்பு மூண்டது.

“ஆமா அதே தான்” என்று அவன் கூற, “அப்போ இனி சிவா கூட பேச்சு வச்சிக்க கூடாது..” என பதிலுக்கு கூறி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

மாலையில் கல்லூரி முடிந்ததும் வீடு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள் வெண்பா. அந் நேரம் பைக்கில் அவ்விடம் வந்த சிவா அவள் முன்னே நிறுத்தி வண்டியை இறங்காமல் அவளை பார்த்தவன்,
“ஏன் வெண்பா நீ வெயிட் பண்ணலை? நான் தான் உன்னை வெயிட் பண்ண சொன்னேனே?” என அவளிடம் கேட்க, திடீரென பொய் கூறத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.

“அது..அது.. நம்ம ப்ரொஃபஸர் மேகலா மேம்.. ஒரு புக் கொடுக்குறேன்னு சொன்னாங்க அவங்களை பார்த்துட்டு வர்றதுகுள்ள நேரமாயிடுச்சு.. இதுக்கு மேல இங்கிருந்தா வீட்டுக்கு போக லேட்டாகும் அதான்..” என்று இழுவையாக தட்டுத் தடுமாறி ஒரு பொய்யை வரவழைத்துக் கூறி முடித்தாள்.

“ஹூம் ஓகே வண்டியில ஏறு நான் உன்னை ட்ராப் பண்றேன்..” என்று சாதாரணமாக அவளை அழைக்க, “இவனுக்கென்ன லூசா..” என்பதை போல் பார்த்து வைக்க, அவள் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தவன்,

“அந்த வீணாப்போன குருவும் அவன் கூடவே சுத்திக்கிட்டு இருக்குமே வால் இல்லாத குரங்கு சுகீயும் உனக்கு என் கூட பேச வேணாம்னு ஏதாவது சொன்னாங்களா?” என்று அவளிடம் கோபமாக வினவான்.

“என் குரு உனக்கு வீணாப்போனவனா?? நீ தான்டா வீணாப்போன முண்டம்..” என்று மனதால் சிவாவை அர்ச்சித்துக் கொண்டிருக்க,

“யாருக்கு யாரும் எதுவுமே சொல்லித் தரத்தேவையில்லை. சுயமா யோசிக்க அவங்களுக்குன்னு மூளை இருக்கு.. அது மூளைனு ஒன்னு இருக்குறவங்களுக்கு மட்டும் தான் பொருந்தும்” என்று குத்தலாய் கூறிக்கொண்டே தன் பைக்கை அவனது முன்னால் நிறுத்தி, அவளை பார்க்காமலே,

“வெண்பா வண்டியில ஏறு..” என்று கூற தான் கேட்பது நிஜம் தானா? என்பது போல விழியகல அவனையே உற்று பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள் வண்டியில் இன்னும் ஏறாமல் இருப்பதை பார்த்தவன்,
“வெண்பா வண்டியில ஏறுன்னு சொன்னேன்..” என்று சற்று குரலை உயர்த்தி அதட்டும் குரலில் கூறிய அடுத்த நொடியே ஓடிச்சென்று அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொள்ள வண்டியை கிளப்பினான் குரு. ஜோடியாக செல்லும் அவர்களையே எரிக்கும் பார்வையுடன் வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான் சிவா.

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here