தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தினால் சற்று சலனத்துடன் அவனறையில் கண்மூடிப்படுத்திருந்தான் விஷ்ணு .
சம்பந்தமில்லாமல் ஏன் இக்கனவு தன்னைத் தொல்லைப்படுத்துகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் . வாசலில் ஏதோ நிழலாடுவதுபோன்ற பிரமை ஏற்படவே தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு வாயிலை நோக்கினான்
“ ஹலோ விஷ்ணு …. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க …. இப்போ ஹெல்த் பரவாயில்லையா… என்றபடி கையில் ஒரு கண்ணாடிக் குடுவையில் சாத்துக்குடிப்பழ ரசத்துடன் அவனறையில் பிரசன்னமானாள் வேதா .
“ஹ்ம்ம் ….இப்போ பராவாயில்லை வேதா நான் நல்லாத்தான் இருக்கேன் . பாவம் என்னால உங்க ட்ரிப் தான் வேஸ்ட் ஆகிடுச்சு . ஐ அம் ஸாரி வேதா “ என கூறினான் .
“அதில என்ன இருக்கு விஷ்ணு … இன்னைக்கு இல்லைன்னா என்ன … நாளைக்குப்போனா போகுது … அதுக்கு ஏன் இப்படி ஃபீல் பண்றீங்க … உங்க ஹெல்த்தான் எங்களுக்கு முக்கியம் பிக்னிக் இல்ல … “ என்று கூறி தான் கொண்டுவந்திருந்த பழரசத்தை அவனிடம் கொடுத்தாள் வேதா .
ஒரு ஸ்நேகப்பார்வையுடன் அவளுக்கு நன்றி சொல்லி பழரசத்தைப் பருக ஆரம்பித்தான் . “ ஹ்ம்ம் நல்லா இருக்கு வேதா …நீங்க குடிச்சீங்களா “ என்று கேட்டான் விஷ்ணு .
“ இது நானே ப்ரிப்பேர் பண்ணது விஷ்ணு … அதுவும் வெரி ஃபர்ஸ்ட் டைம் ட்ரை … அது எப்படிங்க உங்களுக்கு தராம நான் சாப்பிட முடியும் … நீங்க குடிச்சி டென் மினிட்ஸ்க்கு உங்களுக்கு எதுவும் ஆகலைன்னா அப்புறம் நான் குடிக்கிறேன் … “ என்றவளின் வாய்மொழி முதலில் புரியாமல் திருதிருவென்று முழித்தவனுக்கு சிறிது நேரம் கழித்தே அவள் சொன்னது உரைக்க “ யூ நாட்டி கேர்ள் …. என்னைப் பார்த்தா சோதனை எலி போல தெரியுதா உனக்கு…. அதெல்லாம் தெரியாது நீயும் பாதி குடி எது ஆனாலும் ரெண்டு பேருக்கும் சேர்ந்து ஆகட்டும் என்று அருகிலிருந்த டீப்பாயின் மேல் இருந்த இன்னொரு குவளையில் பாதி ஜூஸை ஊற்றி அவளுக்கும் கொடுத்தான்.
வேதாவிற்கே தன்னை நினைத்து சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது . விஷ்ணுவிடம் இவ்வளவு சகஜமாகப் பழகுவாள் என்று அவளே நினைத்திருக்கவில்லை.
உள்ளுக்குள் பரவசமின்னல் பாய்ச்ச ஏதோ பேசவந்தவ வேதாவின் வார்த்தையை வெட்டியது ராமின் குரல் . “ ஹலோ வேதா மேடம் , இங்க என்ன செய்றிங்க . என் நண்பன் பாவம் அவன் காதில இரத்தத்தை வர வச்சிடாதிங்க …. அவனுக்கு உடம்பு வேற சரியில்லை “ எனக்கூறி வேதாவின் காலை வாரினான் ராம்.
உடனே விஷ்ணுவோ “ டேய் அதேல்லாம் ஒன்னும் இல்லை . அவங்க என்கிட்ட இன்னும் சரியாகூட பேச ஆரம்பிக்கலை. ஏன்டா இப்படி கிண்டல் பண்ற “ என அவளுக்காக வரிந்து பேசினான் விஷ்ணு .
அடப்பாவி “ உங்க ஃபர்ஸ்ட் மீட்டிங் ஞாபகம் இருக்கா உனக்கு . அவளுக்காக அன்னைக்கு சப்போர்ட் பண்ண வந்த என்னையே பார்வையாலேயே எரிச்சிட்டியேடா பாவி . இப்போ என்னன்னா கதை உல்டாவா மாறுது “ என வாயில் கைவைத்தான் ராம் .
அதைக்கேட்டவுடன் பரஸ்பரம் பார்வையை பரிமாறிக்கொண்ட இருவரும் சிரிப்பு ஒன்றையே அவனுக்கு பதிலாக அளித்தனர் .
“ சரி சரி நேரமாச்சு சாப்பிட்றதுக்கு வாங்க இப்போதான் சமையல் ரெடியாகிடுச்சுன்னு நியூஸ் வந்துச்சு சீக்கிரம் வாங்க . அப்புறம் கதை பேசலாம் என கூறினான் ராம் .
மூவரும் சிரித்துக்கொண்டே சாப்பிட டைனிங் ஹாலை நோக்கிச் சென்றனர் . கெளரியும் அவர்கள் வருவதற்க்குள் அனைத்து உணவுகளையும் டேபிளில் வைத்துக்கொண்டிருந்தார் .
பாலாவும் ஜீவாவும் ஊருக்கு உடனே சென்றது கௌரிக்கும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியது . “ பாலாவும் ஜீவாவும் இருந்திருந்தால் வீடே கலகலன்னு இருந்திருக்கும் . அந்த பசங்க நாலு நாள் கூட தங்காமல் உடனே கிளம்பிட்டாங்க . அவங்க ஏதாச்சும் ஃபோன் பண்ணாங்கலா தம்பி “ என ராமைப்பார்த்து கேட்டார் கௌரி .
“ ம்ம்ம்…. ஃபோன் பண்ணாங்க மா . இன்னும் ஊருக்கு போக ரொம்ப நேரம் ஆகுமாம் . இப்போ மதியம் லன்ச்க்காக ஒரு ஓட்டல்ல பஸ்ஸ நிறுத்திருக்காங்கலாம் . இப்போதான் மா அவங்க கிட்ட பேசினேன் “ என சொன்னான் ராம் .
விஷ்ணு கௌரியிடம் “ அப்பா எங்கம்மா போயிருக்காரு வந்த இத்தனை நாள்ள அவரை ஒரு ரெண்டு மூன்று முறை தான் பார்த்திருப்போம் . ரொம்ப வேலையா அவருக்கு . வீட்டில இருக்கவே மாட்டேங்குறார் “ என வினவினான்.
அட ஆமாம் பா அவர் இப்போலாம் வீட்டில அதிகமா இருக்கிறதே இல்ல வெலை வேலைன்னு வேளியவே சுத்திட்டு இருக்காரு . இன்னைக்குதான் மதியம் சாப்பிட வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருந்தார் . கூட அவரோட பிஸினஸ் பார்ட்னரும் வராராம் . அவருக்கும் சேர்த்து சமைக்க சொல்லிருக்கார் “ என கூறி பெருமூச்சு விட்டார் .
அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவரின் அறைக்குச் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தனர் . தன் அறையில் கண்களை மூடிக்கொண்டே தனக்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டு படுத்திருந்த விஷ்ணுவின் கவனத்தைக் கவர்ந்தது அவனது அறையின் கதவைத்தட்டும் சப்தம் .
“ ஒரு நிமிஷம் இதோ வறேன் “ என்றபடியே கதவைத் திறந்தான் விஷ்ணு . “ டேய் விஷ்ணு … உனக்கு உடம்பு இப்போ ஓகே தானே?…. உனக்கு ஓகேன்னா ஏரிக்கரைக்கு போகலாம்… இந்த சமயத்துல அந்த ஏரியா பார்க்கவே அழகா இருக்கும் … காத்தும் ச்சும்மா சில்லுன்னு வீசும்… ரொம்ப அழகா இருக்கும் … “ என்ற தன் கேள்விக்கு விஷ்ணுவின் பதிலை எதிர்பார்த்து அறை வாயிலிலேயே நின்று கொண்டிருந்தான் ராம் .
“ ஓ…. தாராளமா …. எனக்கும் இப்ப எங்காவது வெளில போகனும்னு தோனுது … வா போகலாம் …” என்றபடியே உள்ளே சென்று தனது ஃபோனை எடுத்துக்கொண்டு ராமுடன் கிளம்பினான் விஷ்ணு .
ராமின் வீட்டிலிருந்து நடந்தால் 10 அல்லது 15 நிமிடநேரத்திலேயே ஏரி வந்துமிடுமாகையால் வாகனத்தை தவிர்த்து நடைப்பயணத்தையே மேற்க்கொண்டனர் இருவரும் . நிஜமாகவே விடையூரினை மிகவும் பிடித்துத்தான் போயிருந்தது விஷ்ணுவிற்கு . மாலை நான்கு மணிச்சூரியன் தன் வெம்மையை குறைத்து அழகாக வானவீதியில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது . தார்ச்சாலையின் இருமருங்கிலும் பசும்போர்வை போர்த்தியது போன்ற வயல்வெளியின் மீது பட்டு தெறித்த காற்றும் அதன் மனமும் பரமசுகத்தை அளித்தது அவர்களுக்கு .
ராம் கூறியது போலவே அழகாகத்தான் இருந்தது அந்த இடம் … சுற்றிலும் தண்ணீர்மயம் , சுத்தமான காற்று , சூரிய அஸ்தமனம் ஆக சற்று நேரமே இருந்ததால் தன் கூடுகளுக்குப் பறந்து செல்லும் புள்ளினங்களின் விதவிதமான சப்தங்கள் என ரம்மியமான சூழ்நிலையாக இருந்தது .
அந்த சமயத்தில் ராமின் அலைபேசிக்கு அழைப்பு வரவே விஷ்ணுவிடம் தான் பேசிவிட்டு வருவதாக சொல்லி அங்கிருந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டு அழைப்பை ஏற்று பேசத்தொடங்கினான் ராம் .
அந்த அழகான சூழ்நிலையை இரசித்துப்பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு பின்புறம் ஏதோ நிழலாடியது போல் இருக்கவே திரும்பிப்பார்த்தவன் விக்கித்துப்போனான் . அந்த பைத்தியக்காரன் விஷ்ணுவின் முன் வந்து நின்று அவனையே வெறித்துக்கொண்டிருந்தான் .
பின் “ நீ கண்டதெல்லாம் கனவுமில்ல… பார்க்கிறதெல்லாம் காரணமில்லாமலும் இல்ல…. உன் குழப்பமெல்லாம் தீரும்… நீ வந்த காரியமும் நிறைவேறும் “ என்று ஏதோதோ சொல்லிக்கொண்டிருநதான் அப்பைத்தியக்காரன் .
“ விஷ்ணு…. திரும்பி நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டபடியே அவனருகில் வந்து நின்றான் ராம்….இல்லடா இந்த பைத்தியக்காரன்தான் ஏதேதோ உளரிட்டு இருககான் என்றபடி அவனிருந்த இடத்தில் கைக்காட்டிய விஷ்ணுவிற்கு அதிர்ச்சியே மிஞ்சியது . அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒருவருமே இல்லை.
“ எந்த பைத்தியக்காரனை சொல்ற … இங்கதான் யாருமே இல்லையேடா…. என்ன ஆச்சு உனக்கு … ஆர் யூ ஆல்ரைட்… “ என்றபடி விஷ்ணுவின் தோளில் கைவைத்தான் .
சற்று நேரம் பிரமை பிடித்தவனைப்போல் நின்றிருந்த விஷ்ணு ராம் உலுக்கிய உலுக்கலில் தன்னிலைக்கு வந்தான் . “ ஹ்ம்ம… ஆம் ஆல்ரைட்டா….வா வீட்டுக்கு போகலாம் எனக்கூறி வீட்டிற்கு கிளம்பினார்கள்.
வீட்டிற்கு வந்த விஸ்ணுவின் மனத்தில் சஞ்சலம் தண்ணீரில் கலந்த சாயமாய் அப்பியிருந்தது . தன்னைச்சுற்றி எதோ மர்மமாக நடப்பதைப்போல் உணர்ந்தான் தனக்கு நேர்ந்துகொண்டிருப்பது என்ன ? இந்த மாயவலையை விட்டு எப்படி விலகுவது … இல்லைன்னா நடக்கிறது எல்லாம் என்னுடைய பிரமையா… “ விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடையை தேடிக்கொண்டிருந்தான் விஷ்ணு .
சற்று நேரத்திற்கெல்லாம் வேலைக்காரி வந்து இரவு உணவை உட்கொள்ள அழைத்தாள் . பின்னர் அனைவரும் சாப்பிட்டு விட்டு விஷ்ணு , ராம் , வேதா , கௌரி அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரின் ஹார்ன் சப்தம் கேட்கவே “ உங்க அப்பா வந்துட்டார் போல” என கூறிக்கொண்டே எழுந்தார் கௌரி .
“ஆஹா மாமி ……மாமா வந்துட்டார்னு ஹார்ன் சௌன்ட் வச்சே கண்டு பிடிச்சிட்டேளே…… ஓவர் லவ்ஸ் தான் போங்க “ என சிரித்துக்கொண்டே கூறினாள் வேதா.
உடனே கௌரி “ ச்சீ வாயாடி…. வாய குறைடி நம்ம ஹார்ன் சௌன்ட் எனக்கு தெரியாதா ?”. என கேட்டார் கௌரி .
“ அட போங்க மாமி நீங்க நான் சொன்னதுக்கு வெட்கப்பட்றதுதான் கண்கூடா தெரியுதே “ என மேலும் வம்பிற்க்கு இழுத்தாள் . இந்த முறை அவருக்கு உண்மையிலேயே வெட்கம் வந்து அந்த இடத்தை விட்டு அவசரமாக நழுவினார் .
அதைப்பார்த்து மூவருக்கும் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியவில்லை . விஷ்ணுவும் சிரித்துக்கொண்டிருந்தான் . அந்த சிரிப்பு ராமின் அப்பா ஈஷ்வரபாண்டியன் உடன் வந்தவரைப் பார்த்ததும் இருந்த இடம் தெரியாமல் பறந்தது.
தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை . அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான்.